புகழினி

May1, 2010

போரும் அமைதியும்-டால்ஸ்டாய்

Filed under: நூல்கள் — pukalini @ 03:50

இதைப் பற்றி எழுதுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும் எனலாம். ஆனால் படிப்பவனுக்கு எதையும் சொல்ல உரிமை போதும். தகுதி தேவையில்லை.உலகின் மிகச் சிறந்த நாவல். என் மனைவி இதை நாவல் என்றே ஒத்துக் கொள்ளவில்லை. அவள் படிப்பது நாவலாம். இது வேறோ ஒன்றாம். இருக்கலாம். எல்லோராலும் எல்லாவற்றையும்  உட்கார்ந்து படித்து விட முடியாது.

நீண்ட காலத் தேடுதல். எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை. காசு  கொடுத்து வாங்கவும் வசதியில்லை. அண்மையில் ஆசை கை கூடியது. சுளையாக 1000 இந்திய ரூபாய்கள் கொடுத்து வாங்கினேன். மதுரை சர்வோதய புத்த நிலையத்தில். அங்கும் இருந்தது ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. வேறு எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை.

சீதை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். மொத்தம் 2500 பக்கங்கள் தேறும்.தமிழாக்கம் செய்திருப்பவர் சொக்கலிங்கம். ஆங்கிலத்தில் என்னிடம் இருக்கிறது. நூலகத்திலும் கிடைக்கும். ஆனாலும் தமிழில் படிக்க வேண்டும் என்று காத்திருந்து சாதிதேன்.இருந்தாலும், இந்த மொழி பெயர்ப்பு அவ்வளவு தூரம் எடுபடவில்லை. உதாரணத்துக்கு திலகவதி மொழி பெயர்த்த குற்றமும் தண்டனையும்-உடன் ஒப்பிட முடியாது. ஆனாலும் சொக்கலிங்கம் பாராட்டுக்குரியவர். இந்தப் பெரிய புத்தகத்தை வாசித்து முடிக்கவே ஒரு மாதம் தேவைப்பட்டது. அதை படித்து புரிந்து மொழி மாற்றுவது கண்டிப்பாக இலேசுப் பட்ட காரியம் கிடையாது.அதுவும் சிலர் நான் அதைப் படிச்சேன், இதைக் கிழிச்சேன் என்று புலம்பிக் கொண்டு திரிகையில் இது ஒரு ஆக்கபூர்வமான செயலாகும்.

இனிப் புத்தகத்துக்கு வருவோம்.

எனக்கென்னவோ உலகின் சிறந்த நாவல் என்பது அதிகம் போல இருக்கிறது. டால்ஸ்டாயின் அனேகமான படைப்புகள் ஓரளவுக்கு வசதி படைத்தவர்களைச் சுற்றியே இருக்கும். புத்துயிர்ப்பு அல்லது அன்னா கரினினா. மொத்தமாக வசதி படைத்தவர் வீட்டு பிரச்சினைகளையே மையமாகக் கொண்டிருக்கும். அவரும் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருக்கலாம். கார்க்கியோ, தஸ்தாயேவ்ஸ்க்கியோ இதில் அவரிடம் இருந்து வேறு படுகிறார்கள்.

படித்துக்கொண்டு போகும் பொழுதெல்லாம் யாரை மையமாகக் கொண்டு எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். மூன்று பாகங்களில் மூன்று பேரை வைத்து சம்பவங்களினை  நடத்திச் சென்றிருப்பார். எனக்கென்னவோ பீயர் தான் கதா நாயகன் என்று தோன்றியது. பீயரின் குணாதியசங்கள் எனக்கும் ஒத்து வந்ததாலோ அல்லது டால்ஸ்டாய் தன்னையே பீயருக்கு கொடுத்திருந்ததாலோ தெரியவில்லை.

ஆரம்பமே ஆட்டம்,பாட்டம்,கூத்து என்று அமர்க்களப் பட்டிருக்கும். புத்தகம் பூராவுமே விருந்துகளும்,போதையேறிய  சம்பவங்களும் விரைவிக் கிடக்கும். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அங்கு நிகழும்  கேவலமான அரங்கேற்றங்களை படம் பிடித்துக்காட்டியிருப்பார். ஒவ்வொருவரும் தமது பெண்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதினையும், தப்பான சேர்க்கைகளை கூட்டுவதினையும், தத்தமது  சுயலாபத்திற்காய் எந்த மாதிரி தகிடுத்தனம் பார்க்கிறார்கள் என்பதையும் ஆற அமர விளக்கியிருப்பார். ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. அதில் சிக்கிக் கொண்டு எப்படி கதி கலங்குகிறார்கள் என்பதை படித்தால் தான் தெரியும்.

பீயர் வெளி நாட்டில் படித்து விட்டு வந்து சந்தர்ப்பத்துக்கு உதவாத கதை பேசிக் கொண்டிருப்பதாகக் காட்டி அவர் மூலம் நெப்போலியனின் உயர்வுகளை கண்டிப்பாக சொல்லி இருக்கிறார். சாதாரண ஒருவன் சக்கரவர்த்தியாவது இலேசுப் பட்ட விடயம் அல்ல. ஏராளமான சரித்திர சம்பவங்களை ஒப்பிட்டு குறியிட்டுருப்பார். பீயர் தப்பான தாய்க்கு பிறந்த படியால் அவருக்கு ஏற்படும் அவமானங்களையும், அவர்  எப்படி அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்கின்றார் என்பதையும் சுட்டி அதனால் அவர் எப்படி மிகவும் முக்கியமான விடயங்களினையும் மறந்து  போகின்றார் என்பதையும் சுட்டுகிறார். கண்டிப்பாக அவரது இந்தப் போக்குகள் எவ்வளவு துரதிஸ்டமானவை என்பதையும் அவர் கடைசி வரை உணரவே விடவில்லை.

பீயர் எவ்வாறு திருமண் பந்தத்திற்குள் இழுக்கப் படுகின்றார், கூடாத சேர்க்கைகள் உள்ள மனைவியின் கணவன் எந்தளவுக்கு நொந்து போவான் என்று பக்கம், பக்கமாக விபரித்து கடைசியில் அவளின் எண்ணத்துக்கே அவளை விட்டு விடுவது வரை ஒரே களேபரம் தான். அன்னா கரினினாவிலும்,புருசன் சொல்லுவான் நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ,ஆனால் எனக்கு மனையாக இரு என்று. ஏன் இந்த தொடர்பு என்று தெரியவில்லை.

பீயரின் மனைவி கெலன். ஏற்கனவே சகோதரனுடன் தப்பான உறவிலலிருந்தாள் என்று சொல்லுகிறார். அவளுக்கும் ஊரில் உள்ள பெரிய பிரபலங்களுக்கும் தவறான சேர்த்தி உள்ளது என்று சொல்லும் அவர் அவற்றை விபரிக்க மறுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவளுடன் டோலகோவ் என்பனுக்கு இருந்த உறவால் பீயர் டூயல் சண்டைக்கு போவதும் ,பின்னர் வருந்துவதும் அதனால் மனைவியுடன் ஆக்ரோசத்துடன் ச்ண்டைக்கு தயாராவதுமாக இருந்தாலும் ஏனோ சில படிகளுக்கு மேல் போகவில்லை. இங்கு அவர் பீயர் ஆத்திரம் அடைந்து கோபப்பட்டால் எவ்வளவு பலமிக்கவாகிறார் என்று காட்டும் டால்ஸ்டாய் எந்தக் கட்டத்திலும் பீயர் அதை தனக்காக உபயோகிக்க விடவில்லை.

டால்ஸ்டாய்  எவ்வளவு காலம் எடுத்து இதனை எழுதினார் என்றும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். புறச் சூழ் நிலைகள் அவரை நிறையவே மாற்றி மாற்றி எழுத வைத்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  உதாரணத்துக்கு கெலனையே எடுக்கலாம். தம்பியுடன் தப்பான உறவு . கண்ட பயலுகளுடன் சேர்த்தி என்று போகும் அவள் எப்பொழுதும் தம்பியுடனோ, மற்றவர்களுடனோ எப்படி இருந்தாள் என்பதை சொல்லவில்லை. ஒரே ஒரு வசனம் மட்டுமே வருகிறது.மிகவும் பிரபலமாக இருந்த அவள் நெப்போலியன் ரஷ்யாவுக்குள் வந்ததிலும் அவளின் செய்திகள் முக்கியம் என்று காட்டிய டால்ஸ்டாய் அவளின் சாவை ஒரே வசனத்தில் முடிக்கின்றார்.  அடிக்கடி அவரது இந்த ஒரு வசனம்(கள்)கடுப்பாக்குகின்றது.

பீயரை மனைவியை வைத்தே உயர்வாக்குகின்றார். இந்தக் காலத்து மொழியில் பெண்ணுரிமை. அவர் எப்படி சிந்திக்கின்றார். அவள் கெட்டுப் போன ஸ்திரி என்று தெரிந்தும் அவளை தொந்தரவு செய்யாமல் எப்படி சுதந்திரமாக விட்டு வைக்கின்றார் என்று சொல்லும் டால்ஸ்டாய் ஏன் என்று கடைசி வரை புரியவைக்கவில்லை.

பீயர் பணக்காரராக இருந்தாலும் எவ்வளவு தூரம் மடத்தனமாக இருக்கின்றார். சாதரணமான ஒருத்தனுக்கு தெரியும் விடயங்கள் அவருக்கு ஏன் புரிய மாட்டென்கிறது. சண்டைக் களத்துக்கு சுற்றிப் பார்க்க ஏன் போகின்றார். அது மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் சோதனையான விடயம் என்பது அவரது சிந்தனைக்கு எட்டவில்லையா? எல்லாம் காரணத்தோடு தான்.

தொடரலாம்………..

April24, 2010

பிச்சைக்காரனாக்கிட்டாங்களே..

Filed under: சமுகம் — pukalini @ 01:39

நான் வேலை செய்யும் ஒரு இருட்டுக் கட்டடம். யாருக்குமே உள்ளுக்குள் என்ன நடக்குதென்று பூரணமாகத் தெரியாது. நாட்டின் முக்கியமான மற்றும் அத்தியாவசிய தேவைகள் பரிமாறப்படும் இடம். இன்னமும் பல ரகசியங்களை தனக்குள் மூடி வைத்திருக்கின்றது. கட்டடத்தின் அளவுக்கு கூலிகளின் அளவு மிகவும் கொஞ்சம்.

அதிலும் அதைக் கூட்டிக் கழுவித் துடைச்சு வைக்கிறதுக்கு என்று ஒரு கூட்டம். அங்கும் பல பிரிவுகள். கட்டடத்தின் வெளிப் பக்கத்தை  பெருக்கவும், ஊதித் தள்ளும் சிகரட் அடிக்கட்டைகளை பொறுக்கவும்  வாய்க்குள் மித மிஞ்சிப் போன எச்சிலை துப்பினால் அதைத் துடைக்கவும் என்று ஒருத்தன். பாவம். அவன் ஏற்கனவே ஒரு மாதிரி. கொஞ்சம் மூளையில் சுகமில்லாத ஒரு நடுத்தர வயது ஆடவன். இது வரைக்கும் எந்த வித குளறுபடியும் செய்ததாகத் தெரியாது.

எதுவோ ஒரு பன்னாடை முறையிட்டுள்ளது. அவன் பார்க்கின்ற பார்வை சரியில்லையாம். இருக்கலாம். கூட பணி புரிபவளின் சட்டைக்குள் என்ன இருக்கு என்று ஆராய்பவனுக்கும்,  அவனுக்கு ஏத்தி விட்டு குளிர்காயும் மகளிர் அணிக்கும் அவன் ஒரு குறைபாடுள்ள ஒரு சக மனிதன் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்திருக்காது தான்.

பாவம் அவன். கடந்த ஒரு மாதமாக கட்டடத்துகு வெளியிலேயே தவம் கிடக்கின்றான். மீண்டும் வேலையில் சேரலாம் என்ற நம்பிக்கை.அவனுடன் கூட வேலை செய்யிறவங்களும் அவனிடம்  ஒழிந்து திரிகிறார்கள். தினமும் இது ஒரு வாடிக்கை. அவனுக்கு கொடுக்கின்ற சம்பளத்தில் ஒருவனால் மூன்று வேளையும் ஒழுங்காச் சாப்பிடக் கூட முடியாது. அவனிடமும் தமது திமிரைக் காட்டி இ ருக்கு ஒரு கூட்டம். அவனால் இப்பொழுது எங்கு வேலை பார்க்க முடியலாம்?

நேற்று வழமை போல அவன் வந்து நின்றான். ஒரு பெண்மணி கொஞ்சம் காசு கொடுத்து விட அவன் அதை வாங்கிக் கொண்டு சாப்பிடச் சென்று விட்டான். ஆமாம், அவன் உடல் மெலிந்து தான் போனான். சாப்பாட்டுக்கு என்ன செய்வான். கடைசியில் கை ஏந்த வைத்து விட்டார்களே. இன்றும் அவனைப் பார்த்தேன். என்ன செய்வது ஏதாவது கொடுக்கவும் மனசு வரவில்லை. அந்த முகத்தையும் உற்றுப் பார்க்கவும் தைரியம் இல்லை. நானும் ஒரு குற்றவாளி தான்.

April7, 2010

மதுரை இராசாசி மருத்துவமனை-உயிருடன் திரும்பலாமா?

Filed under: சமுகம் — pukalini @ 23:21

பிறவிப் பெருங்கடல் எடுத்த பயனுக்கு இப்பிறப்பிலேயே, பூவுலகில் மதுரை இராசாசி மருத்துவமனையைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆமாம், பாவஞ் செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள்,கொலைகாரர்கள்,திருடர்கள்,பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள் எல்லோரும் அங்கே தண்டனைக்கு காத்திருந்தார்கள். பின்னர் எவ்வாறு அந்த மருத்துவமனையையும் அங்கு சிகிச்சை பெறக் காத்திருப்போர்களையும் சொல்லுவது. பாவப் பட்ட சீவனுகள் போக்கிடம் இல்லாமல் அங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள். மற்றும் படி மருத்துவமனை என்று சொல்லுவதற்கு அங்கு என்ன இருக்கோ தெரியவில்லை. அன்பு மணீ  கூட வந்திட்டு போயிருக்கார். அவர் பாவம் வெளி நாடுகளிலோ,உள்ளூரிலோ நல்ல மருத்துவம்னையைப் பார்த்திருக்கவே முடியாது. இங்கு குப்பை கொட்டிவிட்டு வரும் மருத்துவ மாணவர்கள் இன்னமும் ஒரு வருசம் மாடு மேய்க்கணுமாம். என்ன கொடுமையடா. முடிஞ்சா ஒரு சுற்றுலா போய்விட்டு வாருங்கள்.

ஆத்தில் மண்ணை அள்ளித் தூர் வாருவாங்கள். வைகையில் ஆத்தோரம் உள்ள பீக்கழிவுகளை ஆத்துக்குள்ளே பரப்புகிறார்கள். வைகைக்கரை மேம்பாலம் எப்போழுது கட்டி முடியும்? சீனாக்காரனின் பொறியியல் அதிசம் என்று யூ டியூப்பில் தேடினால் ஏராளம் வந்து குவியுது. இந்தியாவுக்கு தேடிப் பார்த்தால்…… ரொம்ப சந்தோசம்.

வெள்ளைக்காரன் வராவிட்டால் என்ன நடந்திருக்கும். அவன் போட்ட ரோடு, பாலம், தண்டவாளம், ஆசுப்பத்திரி,கல்லூரி, அணைகள். ரொம்பவே நல்லவங்கடா.

April1, 2010

வைகை சூப்பர் பாஸ்டும் காட்டுமிராண்டிகளும்.

Filed under: சமுகம் — pukalini @ 23:04

நானும் எனது மனைவியும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு வேலையாகப் போக வேண்டி இருந்தது. பேருந்துகளில் பயணம் செய்வதினை விட ரயிலில் பயணம் செய்வது கொஞ்சம் இலகுவாக இருந்தபடியால் முன்னாடியே பதிவு செய்து போகலாம் என்று முடிவெடுத்தோம்.  பதிவு செய்யப் போன மனைவி பாண்டியனில் போகலாம் என்று காத்திருப்போர் பட்டியலில் பெயரைக் கொடுத்து விட்டு வந்தாள்.  இரவுப் பயணம், காலையில் எழுந்திரிச்சு கிளம்ப வேண்டிய அவசரம் இல்லை என்ற நினைப்பு அவவுக்கு.  பின்னர் நல்ல டோஸ் ஒன்று கொடுத்த பின் நானே போய் வைகைக்கு பதிவு செய்து விட்டு வந்தேன்.
காலங் காத்தால எழுந்திருச்சு ஆட்டோ பிடிச்சு மதுரை சந்திப்புக்கு வந்தால் வழமை போல் மூத்திர வாசமும், பீ மணமும் வா  வா என்று கூவாமல் கூவி அழைத்தது. எல்லாம் வழமையானது தானே? படியில் ஏறி இறங்குவதற்குள் சென்னைக்கு நடந்தே போயிரலாம் போலிருந்தது. ஏதோ கொஞ்சம் தாமதித்து கிளம்பிய சூப்பர் பாஸ்ட் ஆடி அசைந்து சென்னைகு மதியம் கழித்து 1430க்கு வந்தடைந்தது. மதுரையில் இருந்து சென்னைக்கு மிஞ்சிப் போனால் ஒரு 500 கிலோ மீற்றர்கள் இருந்தாலும் சின்னக் கணக்குப் போட்டுப் பார்த்தால், சூப்பர் பாஸ்ட் ஊர்ந்து கொண்டு வந்திருப்பது தெரியும்.  யப்பானில் சுப்பர் சோனிக் ரயில்கள் தான் ஓடுது போல.
மதுரையில் இரு வெளிநாட்டு யுவதிகள் எங்களது பதிவுப் பெட்டியில் ஏறினார்கள்.  பரிசோதனையாளர் வந்து க்லைத்து விட்டார். ரொம்பக் கெடுபிடியான ஆள் போல என்று நினைத்தேன். வண்டி திண்டுக்கல், திருச்சி தண்டி வந்ததும் கேவலம்  புரிய வந்தது. எல்லாக் கூட்டமும் பதிவுப் பெட்டிகளுக்குள் திபு திபு என்று ஏறி இடம் பிடிக்க அடிபட்டார்கள். அட கருமாந்திரமே இப்படித் தெரிந்திருந்தால் இரண்டு நாட்கள் இருவர் சொந்த நேரத்தை செலவு செய்து முன் பதிவு செய்திருக்கத் தேவையில்லையே?கிராமத்து சனங்கள் மட்டுமல்ல, படித்துக் கிழித்த பகுத்தறிவாளர்களும் அந்தக் கூட்டங்களில் அடக்கம். கட்சிக் கூட்டத்து போகிறவர்களும் தான்.
ஒவ்வொரு முறை வண்டி நிற்கும் போதும் தலைவலி. அதிலும் குழந்தைகளுடன் வந்து இடம் கேட்டு முறைக்கும் தாய்மார் செம ஜோர். அவசரத்துக்கு மூத்திரம் போகக் கூட முடியவில்லை. பின்ன என்ன மயித்துக்கடா இப்படி பதிவு செய்து வந்தோம் என்று ஆகி விட்டது. சாதாரண சீட்டுக்களுடன் பதிவுப் பெட்டிகளில் ஏறுவது தப்பு. உள்ள வந்து உட்கார்ந்து இருப்பவர்களுடன் சண்டை போடுவது எல்லாவற்றிலும் தவறு. சீட்டுச் சோதிப்பவர் வந்து சும்மா தேமே என்று மண்டையை ஆட்டி விட்டுப் போய் விட்டார்.  மதுரைக்கு வந்த சோதனையோ என்று கண்ணை மூடித் தூங்கவும் முடியவில்லை. இதுக்கே இப்படி என்றால் பீகாரில் கையை  ஆட்டி வண்டியை நிறுத்தி ஏறுபவர்கள் என்ன கூத்து பண்ணுவார்கள். தமிழ் நாடும் கிட்ட முட்ட பீகாரை முந்தப் போகிறது தானே?
இரண்டு நேர சாப்பாடு வண்டியில் எடுக்க வேண்டும். 3 இட்லி 1 வடை அல்லது பொங்கல் 1 வடை18 ரூபாய்கள். யாரிடம் சொல்லி அழுவது. எல்லாம் அந்தக் குத்தகைக் காரர்களுக்கே வெளிச்சம். இதெல்லாம் அந்தப் பரமேசுவரனுக்கே அடுக்குமா?

February12, 2010

போறணை.

Filed under: அப்பு — pukalini @ 02:05

பாண் போறணை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆறடி ஆரையில இருக்கிற போயிலைப் போறணை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது. பாதித் தீவாருக்கு அது தான் வாழ்வு. நல்ல தண்ணி இல்லா ஊரில, மழைத்தண்ணியை  நம்பிச் செய்யக் கூடிய-காசு கொட்டித் தரும் ஒரே பிழைப்பு போயிலை. அதுவும் வருசத்தில தொண்ணூறு நாள் வெயில் வெக்கைக்குள்ளேயும், கொஞ்ச நாள் போறணைச் சூட்டுக்கேயும் காய்ஞ்சா கை மேல் பலன். மிச்ச நாள்களை கஞ்சியும் பினாட்டுமாகக் கழிக்க வசதியா இருக்கும்.

ஊரில எல்லா வீட்டிலேயும் ஒரு போறணை கண்டிப்பாக இருக்கும். பெருசா, சின்னனா, மத்திமமா எண்டு கன சைசுகள்.விசேசமா கிணத்தடியில தான் போறணை கட்டியிருப்பார்கள். குசினியும் அதே மாதிரித் தான். பத்தி எரிஞ்சா அணைக்க வசதியா இருக்கும். போறணை வீட்டுக்கு ஒண்டு இருந்தாலும் எல்லோருக்கும் புகை போட வராது. அனுபவத்தில படிஞ்சு வரணும். அப்பு புகை போடுறதிலேயும் கில்லாடி. ஊரில டைம் டேபிள் போட்டுக் கூப்பிடுவாங்கள்.

சோதனை எழுதி முடிச்சாப் பிறகு சும்மா இருக்க வேண்டாம் எண்டு நானும் கொஞ்ச நாள் தோட்ட வேலைக்கு போனேன். அப்பு அதில கொஞ்சத்த எனக்கு பிரிச்சுத் தந்திட்டார். செலவெல்லாம் அவரோட. ஆனா வித்து  வாற காசு முழுக்க எனக்கு. செமத்தியான அக்ரிமெண்ட். காலங் காத்தாலேயே  எழும்பித் தோட்டத்துக்கு போயிருவம். மத்த சோம்பேறிக் கூட்டங்கள் வெயில் குளிக்க வரேக்க நாங்கள்  சாப்பிட்டிட்டு படுத்திருப்பம்.

சண்டையால கன காலமா கைப்படாம இருந்த பூமி. சும்மா வீசி எறிஞ்சு விளைஞ்சு குடுத்துது. என்னளவு உயரத்தில என்னளவு நீளத்தில ஒவ்வொரு இலையும் கருவண்டு போல கறுத்து முறுகிக் கிடந்தது. வளமையாக ஒம்பது இலையில தலைப்பு உடைக்கிற அப்பு பதினொரு இலை வரைக்கும் விட்டார். ஒவ்வொரு நாளும் காலையில தோட்டத்துக்க போனா அப்பு கவலைப் படுவார். எதுக்கடா இப்படி பொலிஞ்சு கிடக்குது. பெரு மூச்சோட தான் வேலை தொடங்குவார். எனக்கு ஏனென்று புரியவேயில்லை.

வெட்டிற சீசனும் வந்தாச்சுது. அப்பு வழமையாக் கூப்பிடிற சொத்தியன்ர வண்டில விட்டிட்டு லாண்ட் மாஸ்ரருக்கு சொல்லிட்டார். அதுவும் முதல் ஏத்தம் எங்கட. முன்னூறு கண்டு வெட்டிற இடத்தில நூத்தம்பது கண்டு தான் வெட்டினார். பரவிப் போட இடம் காணெல்ல. உச்சி வெயிலுக்கேயும் பரவி விட்டுக் காய மாட்டன் எண்டிட்டுது. பெட்டிக்கேயும் கொள்ளாம வெளியில தள்ளிக் கொண்டு நிண்டுது. அப்ப தான் விளங்கிச்சுது. உன்ர தான் பெரிசு, உன்ர தான் பெரிசு எண்டு ஊரில ஏன் சொன்னாங்கள் எண்டு. மொத்தமா இருவது தரம் பிரிச்சுப் பிரிச்சு வெட்டினம்.

அப்பம்மா வீட்டில தான் புகை போட்டம்.முதல் புகை போட்டு இரண்டாம் புகையும் முடிஞ்சு காச்சல் புகை போடத் தொடங்கினம். ஒவ்வொரு வெட்டுப் போயிலையையும் அப்பு  பாதியாப் பிரிச்சுத் தான் புகை போட்டார். பாதிப் போறணை சும்மா கிடந்து சூடு காஞ்சுது. ஒவ்வொரு முடிச்சா அப்பு இழுத்து  இழுத்துப் பார்த்து தூக்கினார். அம்மம்மா ஓட்டை போட்டுக் குடுத்த ஒவ்வொரு ஊமல்க் கொட்டையையும் தட்டிப் பார்த்து தான் பரவிப் போட்டார். ஏறத்தாள முடிஞ்சு போயிற்றுது.

இன்னமும் கொஞ்சம் தான் இருந்தது. அப்பு  இந்த முறை கொஞ்சம் கனக்கவே தூக்கிட்டு புகை போட்டார். காலை ஏழு மணிக்கே புகை போட்டாச்சு. அப்பு அடுத்த புகை போட எங்கேயோ போயிட்டார். நான் வீட்ட வந்து குளிச்சுக் கொண்டிருந்தன். அன்ரி கத்திக் கொண்டு ஓடி வந்தா. டேய் போறணை எரியுதடா எண்டு. நானும் கடப்பு, பொட்டு எல்லாம் பாஞ்சு கடந்து ஓடி வந்துப பாத்தா புகை தான் வந்தது. போறணை வாசலில தொங்கிக் கொண்டிருந்த சாக்கைத் தூக்கிப் பார்த்தா உள்ளுக்க நெருப்பு பத்தி எரிஞ்சு கொண்டிருந்தது. மாறி, மாறி கிணத்தில தண்ணி அள்ளி ஊத்தினம். ஊரே கூடிச்சுது. கண்ணூறு பட்டிட்டாம். அது தான் பத்திட்டுதான்.

அப்பு ஆறுதலா பத்து மணிக்கு வந்து சேர்ந்தார். நடந்த விசயம் அவருக்கு இன்னமும் தெரியேல்ல. அப்பு எல்லாம் எரிஞ்சிட்டுது எண்டன். ஒண்டும் சொல்லேல்ல. எந்த உணர்ச்சியையும் என்னால் படிக்க முடியல. வாயை மட்டும் கொஞ்சம் திறந்திருந்தார்.அதிர்ந்து தான் போனார். மெதுவாக வந்து சாக்கைத் தூக்கிப் பார்த்தார். உள்ளே ஒரே சாம்பல் மேடு. அடிக்கடி அப்பு சொல்லுவார். டேய் காச்சல் புகை போடுற போயிலை பெற்றோல் மாதிரி, ஒரு நெருப்புப் பொறி பற்ந்தாக் காணும் முடிஞ்சுது அலுவல் எண்டு. சரிதான்.

அப்பு ஒண்டுக்கும் யோசிக்கல்ல. ஒரு கடகமும் மம்பட்டியுமா போறணைக்க போனார். மளமளவென்று எல்லாத்தையும் அள்ளிக் கொட்டிட்டு வீட்ட வந்து படுத்திட்டார். மத்தியானம் ரெண்டு மணிக்கு ஒழுப்பினார். பெரிய கத்தியும், சின்னக் கத்தியும் தீட்டி ரெடியா இருந்தது. ஒரு கட்டு பனை நாரும் உரிச்சு கிணத்தடியில ஊறிக் கொண்டிருந்தது. வெளியால போய் உள்ள பத்தையளுக்க எல்லாம் பூந்து  நீட்டுத் தடியள வெட்டிப் போட்டார்.  அதுகள களிச்சுப் போடுறது தான் என்ர வேலை. பத்தையளுக்க போக அப்பு என்னை போக விடமாட்டார். தான் சாகிற கட்டை எண்டு எல்லா ஊத்தவாழி வேலையளயும் அவரே செய்வார்.

போறணையில் எரிஞ்ச தடியளை எல்லாம் பிறக்கி வெளியால போட்டிட்டு புதுத் தடியள நாரால சட்டத்தில போட்டு இறுக்கிக் கட்டினார். அம்மம்மா கொஞ்சக் காவோலையளை இழுத்துக் கொண்டு வந்திருந்தா. எல்லாம் கட்டி முடிஞ்சாப் பிறகு காவோலைகளை உள்ள போட்டு கொளுத்தினம். போறணைக்க ஊத்தின தண்ணி காயவாம். அம்மம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கு. எனக்கும் இப்ப தெரியும். கடைசியா மிஞ்சினதுகளையும்  தூக்கி புகை போட்டாச்சு.

பின்னேரம் கோயிலடிக்கு வந்தா ஒரே துக்க விசாரிப்புகள். முப்பதாயிரம் எரிஞ்சிருக்குமா?  ஒரு நிமிசம் கண்ணை மூடிப் பார்த்தேன். முப்பதாயிரத்தை பத்து ரூவாத் தாளா மாத்தி எரிச்சா மிஞ்சின சாம்மலளவு தான் வந்திருக்கும். பூனையர், அது தான் எங்கட அப்பு பிழை விட மாட்டார் எண்டு வேற பச்சாதாபங்கள். இனி அப்புக்கு மரியாதை கிடையாதா? போயிலைய எரிச்சிட்டாரா? நான் தான் ஏதாவது பிசகு பண்ணி இருக்கணும்.

மறு நாளும் வந்தது. அப்பு ஒரிடமும் போகேல்ல. புகை போடக் கூட்டிக் கொண்டு போக அப்பனும் மகனுமாக ரெண்டு பேர் வீட்டுக்கே வந்திட்டாங்கள். அப்பு மறுத்திட்டார். அவங்களும் விடல. பூனையர் வாங்க. நீங்கள் வராட்டா நாங்க  எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொளுத்த வேண்டியது தான் எண்டு அடம் பிடிச்சாங்கள். அங்க போனா காசுங் குடுத்து சீவுற கள்ளில நல்ல கள்ளாக் குடுத்தும் விடுவாங்கள். அப்பு எல்லார் வீட்டுக்கும் புகை போடப் போறேல்ல. ஆனாலும் இவங்களுக்கு புகை போட்டுக் குடுப்பார். ஊரில கள்ளுச் சீவுறவன் வீட்ட போய் திண்டிட்டு வாறான் எண்டு திட்டினாலும் அப்பு சீண்டுறதேயில்லை. நான் கட்டி இருந்த சாறமும் அவங்கள் வாங்கிக் குடுத்தது தான். அம்மம்மாவுஞ் சொன்னா போயிட்டு வாவன் எண்டு. வழமையா அம்மம்மா சொல்லுக்கு அப்புட்ட மரியாதை கிடையாது. ஆனா இண்டைக்கு கிடைச்சுது.  ஈச்சாக் கட்டிலில கிடந்த துவாயைத் தூக்கி தலைப்பா கட்டிக் கொண்டு வெளிக்கிட்டார்.


ஆமா, அந்த வருசம் எங்க சொந்தத்தில ஒருத்தரும் சாகேல்ல. அப்புன்ர பெரு மூச்சின் காரணம் கொஞ்சங் கொஞ்சமாத் தான் விளங்கிச்சுது.


February11, 2010

பனங்கொட்டை.

Filed under: சமுகம் — pukalini @ 02:03

காலையில் அஞ்சு மணிக்கே அம்மா எழுப்பியிருவா. இந்தப் பனக்காய் சீசன் தொடங்கினதில் இருந்து இது ஒரு தலைவலி. அதுவும் சும்மா இல்லை. கையில் டோர்ச் லைற்றும் கடகமுமாக ஒவ்வொரு பனை பனையாத் தேடிப் போகணும். அதிலும் கொஞ்சம் பிந்தினாக் காணும். பக்கத்து வீட்டுக்காரன் முந்தியிருவான். நாலைஞ்சு நாளாய்க் கவனிச்சு அவங்கள் எப்படியும் அஞ்சு மணிக்கு பிறகு தான் எழும்புவாங்கள் எண்டதைக் கண்டுபிடிச்சு எங்கட நேரத்தை அஞ்சு மணியாக்கியாச்சு.

அம்மாவுக்கு ஒரு பெரிய கடகம். எனக்கு சின்னதா ஒண்டு. பனங்காய் பிறக்குறதுக்கெண்டே அம்மம்மா தனிய இழைச்சு பொத்தி வச்சிருப்பா. பத்தாததுக்கு அப்பு வேற நாரினால் பின்னியிருப்பார். நல்லாப் பாரம் தாங்கும். சரி கிளம்பியாச்சு. அவிண்டு விழுகிற சாறத்தை இழுத்து இடுப்பில கட்டிக் கொண்டு அம்மாவுக்கு பின்னால போக வேண்டியது தான். முதலில பிள்ளையார் கோவில் வளவு. போற வழியிலேயே அப்பிடியே சறத்தை தூக்கி ஒண்ணுக்கு அடிச்சு அந்த நேரத்தை மிச்சம் பிடிச்சுக்கலாம். அம்மாவுக்கு தெரியும் எந்தப் பனைக்கு கீழ போனால் நிறையப் பனங்காய் விழுந்து கிடக்கும் எண்டு, அங்க போனால் தெரிந்து விடும் யாராவது முன்னுக்கே வந்து பிறக்கீட்டாங்களா எண்டு. பிறகென்ன அடுத்தது பூனாந்தோட்டத்துக்கு போக வேண்டியது தான். ஒவ்வொரு நாளும் ஆளுக்கு ஒரு கடகம் பிறக்காமல் வீட்ட வாறேல்ல.

அதிலும் இந்த டோர்ச் லைற் அடிக்கிற செலவுக்கு இந்தப் பனங்கொட்டை பெறுமதியானதா எண்டு எனக்கு எப்பவுமே விளங்கினதில்லை. இருந்தாலும் ஏதோ ஒண்டு இருக்கு. நானறிஞ்சு இதுவரையில் எவனும் பனங்கொட்டை பிறக்கப் போய் பனங்காய் விழுந்து அடிபட்டதோ, பனை மரத்துக்கு கீழ கக்கூசு இருக்கும் போது பனங்காயோ, கங்கு மட்டையோ விழுந்து செத்ததோ கிடையாது. இந்தப் பனங்கொட்டை பிறக்குறதிலேயே எழுதப்படாத பல சட்டங்களும், புரிந்துணர்வுகளும் இருக்கு. பிறக்கிக் கொண்டு ஒரு இடத்தில குவிச்சு விட்டால் ஒரு குஞ்சு குரும்பானும் தொடாது. எப்பவாவது மாடு ஈக்கிறதுக்கு இழுத்துக் கொண்டு போனால்ச் சரி. கடைசியில பெரிய கும்பியாச் சேர்ந்த பிறகு பக்கத்திலேயே பாத்தி வெட்டி, அள்ளிக் கொட்டி மூட வேண்டியது தான். ம்ம்ம், அப்புறமா கிழங்குக்கும்,ஒடியலுக்கும் அடிபடும் போது தெரியும் அஞ்சு மணிக்கில்ல நாலு மணிக்கே எழும்பிப் போயிருக்கணும் எண்டு.

இருந்தாலும் பக்கத்து காணிக்கார வாலுகள் ரொம்பப் படான். வளவுக்கேயே காவோலையைப் போட்டு மூடி ஒரு கொட்டிலப் போட்டிட்டு படுத்திருப்பாங்கள். பனங்காய் விழுகிற சத்தம் கேட்டக் காணும் விழுந்தடிச்சு ஒடிப் போய் பிறக்கீருவாங்கள். பத்தாததுக்கு கடகத்தால நிலத்தில அடிச்சு சத்தம் போட்டு அடுத்தவங்கள ஓட வைச்சு சிரிப்பானுகள். எங்களுக்கு பரவாயில்லை. அப்பற்ற அரசாங்கச் சம்பளம் மாசா மாசம் வந்திரும். அவனுகள் பாவம். ஒடியல வித்துக் காசாக்கினால் தான் ஒரு சைக்கிளோ , புதுச் சாறமோ கிடைக்கும். அதாலேயே நான் அவங்களோட போட்டிக்குப் போறதில்லை. இதிலும் ஒரு கள்ள வேலை. பக்கத்து ஆளில்லா வளவுக்கு எங்கட வேலியில பொட்டொண்டு வைச்சு ஆறுதலாகப் போய் பிறக்கி அது ஒரு குவியலா வளவுக்க பெரிசாகும்.

எனக்கு காலைம்பற எழும்புறதோ, கடகத்தோட அலையுறதோ பெரிய வேலையில்லை. ஆனாலும் பூனாந்தோட்ட முடக்குக்கு போகச் சரியான பயம். அங்க நிக்கிற ஒத்தைப் பனையில கொள்ளிவாய்ப் பேய் இருக்காம். அது செக்கல்ல போனால் கல்லால எடுத்து எறியுமாம். இதுவரைக்கும் ஒருத்தரும் கல்லெறிபடாட்டியும் பயம் மனசுக்குள்ள இருக்குது. பார்க்கலாம்..

January4, 2010

பீக் கதைகள்(சிறுகதைகள்)- பெருமாள் முருகன்.

Filed under: கதை — pukalini @ 00:52

கடந்த இரு தடவைகள் நூலகத்துக்கு சென்ற போதும் இப்புத்தகம்  கண்ணில் பட்டது. இருந்தாலும்  எடுத்துச் சென்று படிப்பதற்கு எந்த ஓர் உந்துதலும் ஏற்படவில்லை. இந்த வாரமும் எற்றுப் படவே இரவல் வாங்கிச் சென்றேன். வாசிக்க ஆரம்பித்ததும் தொடர்ந்து வாசித்து முடித்தேன்,புத்தகத்தின் தலைப்பு என்னவோ ஒரு மாதிரி இருந்தாலும் உள்ளடக்கம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் என்னை மறுபடியும் என்னைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. கண்டிப்பாக ஒவ்வொருத்தரையும் சிந்திக்க வைக்கும்.

எமது குறைபாடே வெளி நடிப்பு. அதிலும் இவ்வாறானதொரு புத்தகத்தை எடுக்கவே அசிங்கப் படுவது. எதுக்கு சும்மா வெளிப்பகடைகள்?

சந்தன சோப்பு. என்னை சேலம் பஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. அதில் நான் என்ன மாதிரி நடந்து கொண்டேன் என்று கூனிக் குறுக வைத்தது.  கருப்பனார் கிணறு சிரிக்கவும், நோகவும் செய்தது. மஞ்சள் படிவு, கருதாம்பாளை ஒவ்வொன்றும் எனது இனிய குழந்தைப் பருவத்துக்கு இட்டுச் சென்றது. அதிலும் கடைசி இருக்கை என்னையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

பெருமாள் முருகன் அசத்தி இருக்கின்றார். முடிந்தால் இந்தப் புத்தகத்தை படியுங்கள். இது  நூல் விமர்சனம் இல்லை. படியுங்கள் என்று சொல்கிறேன்.

December4, 2009

மண்ணாங்கட்டி.

Filed under: சமுகம் — pukalini @ 03:53

இந்த மண்ணாங்கட்டிக்கு எப்போதுமே ஒரு மிதப்பான நினைப்பு. தான் தான் இந்த உலகத்திலேயே ஒரு உத்தம புத்திரன். எங்கேயோ ஒரு கடவுளுக்கு பக்கத்தில் இருந்து சாமரம் வீச வேண்டியவன். தவறுதலாக பூமியில் பிறந்து விட்டான். இப்பூவுல வாசிகளுக்கு தான் ஒரு அபூர்வமானவன் என்ற சிந்தனை. ஏதோ ஆறடி உயரத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு டொங்கு டொங்கென்று கைகளை விசிறிய படி நடந்தால் பெரிய இவன் என்று எண்ணம்.

இப்படித்தான் இந்த மண்ணாங்கட்டி பேருந்து நிலையத்தினூடாக நடந்து போய்க்கொண்டிருந்தான். முன்னால் ஒரு சிறுமி அழுது கொண்டு வந்தாள். அவளுக்கு வயது மூன்று இருக்கும். பாடசாலையில் இருந்து வந்து இருக்க வேண்டும். முதுகில் ஒரு புத்தகக்கூடை பின்னாலே இழுத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு தாத்தாக் குடை வேறு. எப்படியோ கூட வந்தவரைத் தவற விட்டிருக்க வேண்டும்.

இப்படித்தான் முன்னரும் ஒருமுறை இந்த மண்னாங்கட்டி அனுபவப்பட்டிருந்தான். அது  சென்னையில். கோயம்பேடு  பேருந்து நிலையம். ஒரு சின்னப் பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டு நின்றிருந்தது. பக்கத்தில் எவருமே இல்லை. சுற்ற முற்றப் பார்த்து விட்டு போலிசிடம் கூட்டிக் கொண்டு போனான். இடையிலேயே அவளின் அப்பா வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

ஏதோ பெரிய சாதனை செய்த மன நிறைவு மண்ணாங்கட்டிக்கு. அந்தப் பெண்  குழந்தை அப்படியே நின்றிருக்குமாம். யாராவது இனிப்பைக் காட்டி கடத்திப் போயிருப்பார்களாம். அப்புறம் என்ன நடந்திருக்குமோ? தன்னால் அந்த ஒரு கொடிய வரலாறு தவிர்க்கப் பட்டு விட்டதாக மன நிறைவு.

அதே போலவே இந்தப் பெண் குழந்தையையும் உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு செயற்கரிய காரியத்தை சாதித்த மாதிரி இருக்கும். மண்ணாங்கட்டி இவ்வளவையும் சிந்தித்துப் பார்த்து அந்தப் பாப்பாவைத் தேடத் திரும்பினான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தான் ஏற்கனவே பெரும் எண்ணத்தில்  நடந்து நிறையத் தூரம் கடந்து வந்து விட்டது.

மண்டைக்குள் என்ன இருக்கோ என்று மண்ணாங்கட்டி தான் என்று தலையில் தட்டி விட்டு, விடுவிடு என்று திரும்பவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு  நடந்தான்.

November27, 2009

காதலி

Filed under: சமுகம் — pukalini @ 04:48

நானும் கன காலமாய் அந்தப் பெண்ணை பார்த்து வருகிறேன். மிகவும் அழகாய், அம்சமாய் இருப்பாள். அந்த இடத்தில், அந்த நேரத்தில் இருக்கும் பெண்களுக்குள்ளேயே அவள் தான் எடுப்பாயும், வசீகரமாயும் தெரிவாள். அவளைப் பார்த்த முதல் நாளில் இருந்து எனது காலைப் பயண நேரத்தையே அவளுக்காக மாற்றி இருந்தேன்.அவளுக்கும் தெரியும் நான் அவளைப் பார்ப்பது. எப்பவுமே அவளிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பு வந்து கொண்டு இருக்கும்.

தொடருந்தின் உள்ளே சென்றாலும் நானும் அவளுக்கு பக்கமாகவே செல்லுவேன். சில நேரங்களில் அவளுக்கு இருப்பதற்கு இடம் கிடைக்கும்.பல தடவைகள் எனக்கும் கிடைத்திருக்கிறது. பக்கத்தில் இருந்து என்ன செய்வது அவளையே சோகமாய் பார்த்துக் கொண்டு பாவமாய் ஒரு லுக்கு விடுறது தான். என்ன அவளுக்கும் எனக்கும் ஒரு 2 அல்லது 4 வயதுகள் தான் வித்தியாசம் இருக்கும். அவள் கொஞ்சம் நிறமாய் இருப்பாள், நான் கொஞ்சம் கறுப்பு. அவளுக்கு நல்ல கறுத்த நீண்ட முடி. அதை அவள் அடிக்கடி கோதி வேறு விடுவாள். எனக்கு மண்டையைத் தான் தடவ முடியும். இருந்தாலும் என்ன? ஒரே இடத்தில தான் வண்டியில ஏறுகிறோம். இறங்கும் போது இரண்டு நிலையங்கள் தள்ளி இறங்குகிறோம். இது போதாதா இருவருக்கும் பொருத்தம் பார்க்க.?

என்னடா இது அவள் இன்று ஒருத்தனுடன் வருகிறாளே? மின்படியில் அவள் வரும்போதே நான் கவனித்து விட்டேன். மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கினேன். சே…. அவன் அவளிலும் உயரம் குறைவாக இருந்தான். சதாரணமாகத் தான் உடுத்திருந்தான். இருந்தாலும் எனக்கு வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது.ஒருமாதிரி என்னைத் திடப் படுத்திக் கொண்டு தூரத்தில் இருந்தபடியே ஒரு பார்வை பார்த்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்……..வண்டியில் போகும் போது இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் இருந்து சில்மிசம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

இப்படியே சில நாட்களும் கடந்தன. ஒரு நாள் எனது நண்பனும் என்னுடன் வந்தான். பொழுது போக்காக எனது சோகக் கதையை அவனுக்கு கூறி ஆட்களையும் காட்டினேன். திடீரென்று அவன் ‘அடி செருப்பால, அது அவன் இல்லை அவள். இவ்வளவு காலமாய் இங்க இருக்கிறாய் இன்னமும் உனக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை’ என்று திட்டினான். நானும் நல்லாக் கவனித்துப் பார்த்தேன். ஆமா அது அவனில்லை அவன். அப்ப இவள்?? அவளா இவள்???


குறிப்பு:

இருந்தாலும் விடா முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தினமும் சோகப் பார்வை பார்த்துப் பார்த்து அவங்களை குழப்பியாச்சு.அந்தச் சோடி இப்பொழுதும் ஒரே நிலையத்தில் ஏறி ஒரே நிலையத்தில் தான் இறங்கும். ஆனாலும் இருவரும் ஒன்றாக இருப்பதில்லை. எல்லாத்துக்கும் பொறாமைப் பிடிச்ச பயலுகள் செய்யிற வேலை தான் காரணம். ஆனா அது நானில்லை.நானும் என்னுடைய ஆளுக்கு பக்கத்தில அடிக்கடி போய் நின்று என்னை ஞாபகப் படுத்திக் கொள்ளுறன். எப்பயாவது ஆண்களை ஏற்பாளா என்று?

புகைப்பவர்களா பொண்டாட்டி இப்படி சொன்னாளா?

Filed under: கதை — pukalini @ 04:45

எனக்கு கொஞ்ச நாட்களாக இல்லை,பல நாட்களாக இந்தப் பழக்கம் இருக்கு. பழைய காதல் மரிச்சுப் போனதில தொடங்கியது. இப்ப வந்த காதலியும் மனைவியுமானவா பல தடவை பல மாதிரியும் சொல்லிப் பார்த்தா. சொல்-வழி கேக்கிற மாதிரித் தெரியல.கடைசியா ஒரு அஸ்த்திரத்த எடுத்து விட்டா. எப்படி?

“நீங்க இதை விடாட்டி நான் குழந்தை பெத்துக்க மாட்டன்”
“ஏன்”
“குடிச்சிட்டு நீங்க சீக்கிரமா மண்டைய போட்டுருவீங்க. அப்புறம் நான் வளர்த்து, ஆளாக்கணும் என்று எனக்கு என்ன தண்டமா”
“……”
“புள்ளையும் தனிய அப்பனில்லாம வளர்ந்து கஷ்டப் படணுமா”
“சரிப்பா”
“அப்புறமா புள்ளையோட இருந்தா இன்னொரு கலியாணம் செய்யிறதும் கஷ்டம்”
.
.
இப்பிடிப் போட்டுத் தாக்கின பிறகும் என்ன செய்ய முடியும்?
“சரிப்பா இனிமே நான் தம் அடிக்கேல”

இதில அவவுக்கு ஆகவும் கோபம் வரக் காரணம், இப்பவும் நான் பழைய சோகத்தில தான் புகை விடுறன் எண்டு.

இருந்தாலும் களவா இப்பவும் புகை விடுவதுண்டு.
நீங்கள்?

October24, 2009

பொது- சேவை

Filed under: சமுகம் — pukalini @ 04:57

இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. வானத்து நிலாவை கரு மேகங்கள் மூடி மறைத்துக் கொண்டிருந்தன. சென்னையின் கடும் இருட்டைப் போக்க முயற்சித்த நிலாவுக்கும் கலைந்து செல்லும் மேகங்களின் முன்னால் தோல்வியே மிஞ்சியது. நிலாவுக்கும் அவசரம். அவளின் அம்மா அவசரமாக திருச்சிக்கு கிளம்ப வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில் எப்படி போக்குவரத்துகள் அமையும்?

இருந்தாலும் ஒரு ஆட்டோவைப் பிடித்து கோயம்பேட்டுக்கு போகச் சொல்லியாச்சு. அவனும் மீற்றருக்கு மேல் காசு கொடுக்கச் சொல்லிவிட்டு இடையில் கொஞ்சக் காசையும் வாங்கி பெற்றோலும் போட்டு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்தான். போவதற்காவது அம்மாவின் பக்கத் துணை. வரும் போது எவ்வாறு திரும்பி வருவது? உலக வல்லரசுப் போட்டிக்கு அணுகுண்டுகள் வைத்திருந்தாலும் தனியாகப் போகும் பெண்ணுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்கே இடமில்லாமல் இருக்குதே.

ஆட்டோக்காரன் ஆட்டோவை ஓரம் கட்டினான். என்னப்பா என்று கேட்டதற்கு இங்கேயே இறங்கி நடந்து தான் போக வேண்டும் என்று போக்குக் காட்டி விட்டு காசையும் கறந்து கொண்டு போய்விட்டான். அவனுடன் சண்டை போடும் நிலையில் இருவருமே இல்லை.

கோயம்பேடு தனியார் பஸ் நிலையத்தை எட்டிக் கூடப் பார்க்க முடியாத தூரத்தில் இறக்கி விட்டுட்டான். இனி என்ன மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியது தான்.   சென்னையின் கேந்திரப் பகுதி.  பள்ளமும் மேடுகளுடன் மூத்திர வாசனையையும் சுமந்து கொண்டு நின்றது. அது போதாது என்று சிலர் பெண்களைக் கண்டவுடன் அப்பொழுது தான் சலப்பை  வெடிக்கப் போகின்றதை உணர்ந்தவர்கள் போல் கைலியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். நல்ல மக்கள்.

பேருந்து நிலையத்தினை அடைவதற்குள்ளாகவே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி பெரு மூச்சாக வந்து கொண்டிருந்தது. அனேகமான எல்லாப் பேருந்துகளும் போய் விட்டன. சில பேருந்துகளுக்கு மட்டும் மாமாமார் நின்று கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். திருச்சி பேருந்து தான் முன்னுக்கே நின்றது. பரவாயில்லை. பக்கத்தில் ஒரு காவல்த் துறை அதிகாரியும் நின்று கொண்டிருந்தார். பேருந்தில் இடமும் இருந்தது. ஒரே ஒரு சீட்டுக் கேட்டாள்.

சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு ஆட்களைக் கூவிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். திரும்பவும் கேட்டாள். பெண்களுக்கு ஒத்தை சீட்டு கொடுக்க முடியாதாம். நிலாவும் பொறுமையாக நின்று சீட்டுக் கிழிப்பவரை வேண்டிக் கொண்டிருந்தாள். காவல்க்கார மாமாவும் தான் உண்மையான மாமா தான் என்று காட்டுவது போல் கேட்டும் கேளாமல் மரம் மாதிரியே நின்றிருந்தார். அவளுக்கு  இனியும் பொறுமை கிடையாது. நீங்கள் எல்லாம் அம்மா, தங்கைகளுடன் வாழ்கிறவர்கள் இல்லையா? என்று தொடங்கி ஆர்ப்பாட்டம் பண்ணி முடித்தும் முடியாமல் அம்மாவுடன் வீட்டுக்கே திரும்பினாள்.

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். நான் ஒரு மருத்துவர். எனக்கே இவனுகள் இப்படி சீனைக் காட்டுறாங்கள். வச்சிருக்காண்டா.  இனிமேலும் யாராவது அழுது குழறிக் கொண்டு வருவீர்கள் தானே?  அப்பொழுது தான் நானும் எனது சீனைக் காட்டுறன் என்று.

August13, 2009

அந்த உண்மைத் தமிழனுக்கு நன்றிகள்.

Filed under: அரசியல் — pukalini @ 08:05

படித்து முடித்தாகி விட்டது. அடுத்து என்ன? வேலை தேடுவதா?  ஊருக்குத் திரும்புவதா? அல்லது  காதலித்தவளுடன் எங்காவது தலை மறைவதா? எல்லாம் ஒரே குழப்பம் சாமியாகி விட்டது. மற்றவர்களுக்கு விடுமுறை. வீட்டிலே போய் கொஞ்சக் காலம் தண்டச் சோறு என்று திட்டு வாங்கும் வரைக்கும் சாப்பிட்டு விட்டு  மல்லாக்கப் படுத்திருக்கலாம். நமக்கு அப்படியா? ஊர்ப் பக்கம் தலை காட்ட முடியாது. என்ன செய்வியோ ஏது செய்வியோ கொஞ்சக் காலம் வீட்டு நினைப்பு வரக் கூடாது என்ற கண்டிப்பான நிர்ப்பந்தம். சாப்பாட்டுச் செலவுக்கு இனி மேலும் கையேந்த முடியாது.   காதலித்தவள் கை விடவில்லை. நீ கிளம்பி என்னிடம் வா. உனக்கு வேலை கிடைக்காட்டியும் நான் படிச்சுக் கொண்டே வேலை பார்க்கிறேன். வாழ்க்கையை ஓட்டலாம் என்று சமாதானம் சொன்னாள். நானும் மூட்டை முடிச்சுக்களுடன் விடுதியில் இருந்து கிளம்பினேன். நெடிய ஆண்டுகளில் எனக்கு வீடாக இருந்ததை பிரிவது எனக்கு வருத்தமாயில்லை. ஆனால், இது வரைக்கும் இப்படி ஒரு சிந்தனை என் மனதுக்குள் வராமல் இருந்தது. இப்பொழுது தான் புரிந்தது எனக்கு அடைக்கலமாகவே விடுதி தான் இருந்திருக்கிறது.

கிளம்பி திருச்சிக்கு வந்து சேர்ந்தேன். அடுத்தது என்ன? வீடு தேடலாம். புருசன் பொண்டாட்டியாக இருக்கலாம் என்று காதலித்தவளும் அரைப் பொண்டாட்டியானவளும் சொல்ல வீடு தேடும் படலம் தொடங்கியது.  காதலியோ சின்னப் பிள்ளை மாதிரி இருக்கிறாள் என்று   அவளுக்கும் சேலை கட்டி ஒரு முகவரைப் பிடித்து வீடு தேடும் படலம் ஆரம்பமாகியது.அடடா தமிழ் மகா சனங்கள் தான் எவ்வளவு கெட்டிக் காரர்கள் என்று மண்டைக்குள் விறைப்புத் தட்டும் வரைக்கும்  வீடு தேடினோம். ஒன்றிரண்டு வீடுகள் தட்டுப் பட்டு ஊர்ப் பேரைச் சொன்னவுடன் தலை தெறிக்க ஓடிக் கொண்டார்கள். இறுதியில் ஒரு வீடு தட்டுப் பட்டது. படித்த குடும்பமாம். படித்தவர்களுக்குத் தான் வீடாம். அதுக்கென்ன நாங்களும் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறோம் தானே?

ஒரே நாளில் வீடு குடி புகுந்தோம். மறு நாள் வீட்டுக்காரரிடம் இருந்து ஒரு அழைப்பு. உங்களை வீட்டில் வைத்திருக்கப் பயமாக இருக்கிறது. இன்று இரவுக்குள் நீங்கள் வேறு வீடு பாருங்கள் என்று செவிட்டாவடியப் பொத்தி ஒன்று போட்டார். என்ன செய்வது? பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிகள் நாங்கள். டாக்குத்தர், இஞ்சினியர் என்றவுடன் வீடு தர வந்தவர்கள் பிறப்பிடம் காரணமாக ஒதுங்கி விட்டார்களா? எங்களது காசு செல்லாதா? அல்லது வீட்டில் இருக்கும் பெண்டுகளுடன் படுக்க இடம் கேட்போம் என்று பயந்து விட்டார்களா? சோமாறிகள்.  நாங்கள் பயங்கரவாதிகளாம். எங்களுக்கு வேறு பிழைப்பே இல்லை. அவர்களின் கவட்டுக்குள் மணி அடிப்பதே எங்களது தலையாய வேலை. இதே ஒரு வெள்ளை நிறக்காரன் கேட்டிருந்தால் எங்க வீட்டில் ஒரு வெள்ளைக்காரனை வைச்சிருக்கம் என்ற பெருமைக்காவது வீடு கொடுக்கப் பட்டிருக்கும். நமக்கு? .

தமிழ் மக்களை நம்பினால் என்னையே செருப்பால் அடிக்க வேண்டும் என்ற முடிவுடன் நடுத்தெருவுக்கும் வந்தாச்சு. என்ன ஒரு கேவலம்? தமிழனை நம்ப ஒரு  தமிழனுக்கு  முடியவில்லை.  அல்லது தமிழனுடன் உறவாடுவது கேவலமானதா? ஒரு சாயா குடிக்க  நாயர் கடை வேண்டும். நாண் சாப்பிட ஒரு பஞ்சாபிக் கடை வேண்டும். துரித உணவு சாப்பிட  சீனாக் காரான் தேவை.  இன்னமும் ஏன் தமிழன் தேய்த்துக் கொண்டு இருக்கின்றான்? இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால் வரும் மதிப்பு அழகுத் தமிழில் பேசினால் வருமா? எங்காவது பிச்சைக்கார அல்ஜீரியாவில் இருந்து வந்திருந்தாலும் கிடைக்கும் மரியாதை அன்புத் தமிழனுக்கு கிடைக்குமா? எப்படித் தமிழன் இப்படி சொந்தப் பொண்டாட்டியையே வெள்ளைக்காரனுடன் படுக்க அனுப்பி வைக்கும் ஆசை வளர வைக்கப் பட்டான்.

நடுத்தெருவில் இருந்து சிந்திதேன். இந்த பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிச் செருப்புகளை நம்பினால் கோமணத்தினையும் உருவி விடுவார்கள். சீக்கிரம் குதிக்கால் பிடரியில் பட ஓடுடா என்று எனக்குள் இருந்த எச்சரிக்கை பொத்தான் எப்பவோ அலற ஆரம்பித்தாயிற்று.
ஆச்சுடா. இரண்டு வருடங்கள். காலை ஆட்டிக் கொண்டு வேலை செய்யலாமா? ஆட்டாமல் வேலை செய்யலாமா? என்பது தான் எனக்கு இப்பொழுது பெருங்கவலை.   அந்தப் புண்ணியவானுக்கு நன்றி சொல்லணும். இல்லாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன். அது சரி தமிழ்  நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எந்த கேணப்பயல்( நான்) சொல்லுவான்.

நான் இன்று  இருக்கும் நாட்டிலும் வீடு தேடினோம்.  வீடு அமைஞ்சு முன் பணமும் கொடுத்தாச்சு. பக்கத்து வீட்டுக்காரன் தகராறு பண்ணினானாம். எப்படி இந்தியக் கழுதைகளுக்கு வீடு கொடுக்கலாம் என்று. அதுவும் தங்களின் வீட்டில் வயசுப் பொண்ணுங்க இருக்கும் போது.   அவனும் ஒரு இந்திய வம்சாவழி தான். அடடா வரலாறு திரும்புதடா. அது சரி எல்லோருமே பீக் குண்டியுடன் தானே திரிகிறார்கள்

August9, 2009

ரெக்கார்ட் டான்சும்- கை அரிப்பும்.

Filed under: அலட்டல் — pukalini @ 20:03

கல்லூரியில் சேர்ந்த மறு நாளே சுற்று வட்டாராத்தில் என்னென்ன விசேசம், பெருமைகள், புகழ்கள் என்று தேடி அலசி ஆராய்ந்து  நமது  தகவல் பெட்டகத்தை நிரப்பிக் கொண்டோம். முக்கியமானது முனியப்பன் கோவில் திருவிழா. திருவிழா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம். தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அந்தக் கோவிலை யாராவது அடையாளம் காட்டாமல் கண்டு பிடிப்பது அரிது. ஆனால் புகழ் பூத்துக் கிடந்தது. அதிலும் கலைவிழா,தொடரும் ரெக்கார்ட் டான்சும் பிரபல்யம்.  ஆட்டத்தின் உச்சக் கட்டத்தில் மகளிர்  அம்மணமாய் தரிசனம் கொடுப்பதுடன் கொடுக்கும் துணிமணிகளும் முக்கியமான இடங்களில் ஆலாதிக்கப் பட்டு திருப்பி வழங்கப் படும். சும்மாவா. அடுத்த திருவிழா எப்போது?

திடிரென்று ஒரு நாள் எங்களது உளவுத் துறை மூலம் கல்லூரிக்கு பின்னால் இருக்கும் ஒரு காட்டுக் கோவிலில் ஆட்டம் என்று தகவல் பெறப்பட்டது. தாக்குதலுக்கு ஏழு பேர் கொண்ட குழு தயாரானது. கூட்டுவதற்கு இருந்த தும்புத் தடியை உடைத்து  கொடியில் காய்ந்து கொண்டிருந்த் எவனோ ஒருவனின் பனியனை சுற்றி தீவட்டி தயாரிக்கப்ப் பட்டது. யாரோ ஒருத்தன் சாமிக்கு விளக்கேற்ற வைத்திருந்த இதயம் நல்லெண்ணெய் பைக்கெற்றுடன் காட்டுக்குள் ஊடுருவினோம். இரண்டு மணி நேர நடைக்குப் பின் கூத்தெல்லம் இல்லையாம் வெறும் பாட்டுத் தானென்ற ஏமாற்றத்துடன் தளம் திரும்பினோம்.

முதல் தாக்குதலே படு தோல்வி. சரியான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்த கட்டம் முக்கியமானது. அடித்தால் ஒரே அடி. காத்திருந்தோம். தகவல் கிடைக்கப் பெற்று நடையாய் நடந்து களத்தை அடைந்தோம். அரை மணி நேரத்திலேயே மழை அடித்து ஊற்ற ஒரு வீட்டுக்குள் ஒதுங்கினோம். கழிசடையள் கூத்துப் பார்க்க வந்திட்டு  வீட்டுக்குள் ஒதுங்குதுகள். சனியனுகள் என்ன புத்தியோடு இருக்குதுகளோ என்று ஒரு பழம் புறுபுறுக்க வெளியே வந்தால் கொட்டும் மழையிலும் கூத்து சூடு பிடித்திருந்தது. இருந்தாலும் அடுத்த நாள் பரீட்சையை முன்னிட்டு சீக்கிரமாகவே தளம் திரும்பினோம்.

அடுத்தது செம அடி. படிப்படியாக எமது தாக்குதல் தளங்களும் விரிந்து சென்றன. இடையில் ஒரு சின்ன கொசுறு பக்கத்திலேயே கூத்தாம். இப்படித்தான் தூர இடத்தில் உற்றுப் பார்த்தால் காலுக்குள் பாம்பு புகுவது கூடத் தெரியாமல்ப் போய்விடும்.

போய் முன் வரிசையில் இடம் பிடித்து அகண்ட வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கையில், கல்லூரியின் கதாநாயகன் சிரித்துக் கொண்டே வந்தான். என்னடா சின்னப் பிள்ளைங்கள் மாதிரி இங்க வந்து உட்கார்ந்து கொண்டு என்னோட வாங்கடா என்று இழுத்துக் கொண்டு போனான்.

கல்லும் முள்ளும் கடந்து போனால் ஒரு ஒதுக்கு. கிடுகால் சுற்றி அடைக்கப் பட்டிருந்தது. உள்ளுக்குள் கனதியான வெளிச்சம். மெதுவாகக் கிட்டப் போய் கிடுகு நீக்கலுக்கால் எட்டிப் பார்த்தோம். ஆட்டக்காரிகள் அரையும் குறையுமாய் ஆடை மாற்றிக்  கொண்டிருந்தார்கள். அடிச்சது லக்குன்னு பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு சத்தம். எவண்டா அவன் ———————————————————-.

எடுத்தம் ஓட்டம். மூச்சிரைக்க ஓடி முன்னால் வந்து உட்கார்ந்தால் கதா நாயகன் சாவகாசமாக வந்த சேர்ந்தான். என்னடா நடந்ததென்று கேட்டோம். எவ்வளவு நேரம் தான் சும்மாவே பார்த்துக் கொண்டிருக்கிறது,அது தான் உள்ளுக்க கைய விட்டுட்டன். அடப்பாவி…………

August4, 2009

மகளுக்கு இந்தியா வேண்டாம்.

Filed under: கதை — pukalini @ 05:01

நேற்று ஒரு மாதிரி நினைத்ததை ஒப்பேற்றியாகிவிட்டேன். அதுவும் இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவதே மிக்கக் கடினம். அதிலும் நாம் நினைத்ததை அவர்கள் சம்மதிக்குமாறு பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் எடுத்துச் சொல்லுவதென்றால் சும்மாவா? என் மகள் ரொம்பவே பிடிவாதக்காரி. என்னுடைய வளர்ப்பு விதம் அப்படி.

நான் மட்டும் இலேசுப் பட்டவனா? நாடறிந்த இலக்கியவாதி.சமுதாய அக்கறை கொண்ட சீர்திருத்தவாதி. எழுதியது என்னவோ பத்துக் கதைகள் தான். அத்தனையும் புரட்சியை தட்டி எழுப்பி இருக்கின்றனவே. முந்நாளில் சினிமாப் பகுதியில் கிசுகிசு எழுதியதும் கை கொடுத்தது. அங்கு தானே கற்பனை கடலெடுத்து ஓடும். எந்த நடிகர் கக்கா போனார், எந்த நடிகை குசு விட்டாள் என்று குழப்பிக், குழப்பி தம் பிடித்து எழுதியே  காலத்தை ஓட்டியவன். என்னிடமா? அதிலும் எந்தப் பள்ளி விழாவானாலும், கல்லூரிக் கலை நிகழ்ச்சியானாலும் காசு வாங்காமல்ப் போய் விளம்பரம் பார்த்தவனாச்சே.

என்ன செய்வது காசுக்கு ஆசைப் பட்டுஅந்தரத்தில் ஒருத்தியைக் கைப்பிடித்தேன். அவளும் ஒரு பிள்ளையை பெற்ற பின் தலை மறைவாகிவிட்டாள்.  வேறு என்ன தான் செய்வாள்? குடியும், கும்மாளமுமாய் இருந்தால் பரவாயில்லை. கூத்தியாளையும் சேர்த்துக் கொண்டது தான் வினையாகி விட்டது. பெற்ற பிள்ளையையும் மறந்து போய் விட்டாள்.

அதை என்ன செய்வது என்று கடனுக்கு வளர்க்கத் தொடங்கி இன்று வினையாகி நிற்கின்றது.  மறுமணம் வேண்டாமென்று நல்லவனுக்கு நடித்து கரை கண்டாலும் என் நற்பெயரைக் காப்பாற்ற மகளை செப்பம் செய்ய வேண்டிற்று. அவளோ எனக்கு மேல். படிப்பும் கட்டை. எப்படியோ அடித்துப் பிடித்து காசைக் கொட்டிக் கரியாக்கி டாக்டராக்கியாச்சு. இனியும் அவளை என் கூட வைத்திருக்க முடியுமா? கலியாணம் செய்து வைக்க வேண்டும்.அதுவும் ஒரு நாமம் போட்டவன் வேண்டுமே?

என்னிடம் கைவசம் நல்ல மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோரும் எனது வாசகர்கள். எனது சிந்தனையில் கவரப் பட்டவர்கள். எவனாவது ஒருத்தனை கை காட்டிக் கட்டச் சொல்ல வேண்டியது தான். அதிலும் வெளிநாட்டு மாப்பிள்ளைதான் நல்லது. எனது கடைசிக் காலத்தில் எங்காவது ஒரு நாட்டில் காலை நீட்டி நிமிர்த்தி உட்கார்ந்து வெளிநாட்டுக் கதை எழுதலாம்.

அதுக்கு என் மகள் சரிப்பட வேண்டுமே? படித்திருக்கிறாளாம். டாக்டராம். ஊரில வேலை செய்ய வேண்டுமாம். அவளின் வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும் தானே. அவள் எல்லாவற்றிலும் என்னை மிஞ்சியவள். 16 வயதிலேயே ஓடிப் போயிட்டு சலிச்சுப் போய் திரும்பி வந்தவள். நான் ஏதோ பிரபலம் எனபதாலும் கையில் கொஞ்சம் காசு இருந்ததாலும் கண்டவனிடமும் காலில் விழுந்து தான் அவளுக்கு மருத்துவக் கல்லூரி அனுமதி வாங்கிக் கொடுத்தேன். இப்பொழுது  டாக்டராம். சும்மா சொல்லக் கூடாது என் மகளுக்கு நல்லாவே நடிக்க வருது. வேறு என்னவாம் இந்தியா தானே இழிச்ச வாயன்கள் நிறைய இருக்கும் இடம். மருந்தை தப்பாக் கொடுத்து எவனாவது செத்துத் தொலைந்தாலும் கேள்வி இல்லை. வெளிநாடுகளில் சும்மா விட்டிருவாங்களா? நான் வெளிநாடு என்று சொல்லுவது அமெரிக்காவைத் தான்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் என்ன உத்தம சீலர்களா? நாட்டுக்கு வரும் போது மட்டும் தெளிவாகுவது. விட்டால் முக்காடு போட்டுக் கொண்டு ஒதுங்குவது. படிக்கும் வரைக்கும் இந்தியா வேண்டும். முடிச்சப் பிறகு குப்பை, தூசி. மூத்திர வாசம். பிச்சைக் காரர்கள். என்ன செய்வது?அவர்களாவது சொர்க்கத்தை அனுபவிக்கட்டுமே. அப்புறம் ஆறு இலக்கத்தில் சம்பளம் போட்டு வலை வீசி பெண்டு பிடிக்கிறது. கூட்டிக் கொண்டுபோய் அங்கு வைத்திருக்கிறவளுக்கு துடைக்கச் சொல்லுறது. இல்லாவிட்டால் மாமா வேலை பார்க்கிறது.

ஒரு மாதிரி மகளை சம்மதிக்கச் செய்தாகி விட்டது. அவளும் அமெரிக்கா போய்விடுவாள். எனக்கும் கடைசிக் காலம் அமெரிக்காவில்.  எழுத்தாளனாக இருந்து சேர்த்த காசு அமெரிக்கா போக உதவுது. தமிழ் நாட்டு மண்ணாங் கட்டிகளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது. அடுத்த முற்போக்கு, பிற்போக்கு அல்லது ஒரு புறம்போக்கோ வயிற்றுப் போக்கு இலக்கியவாதி வருவான். இதுகளும் பல்லைக் காட்டுங்கள். விடுங்கள். அது சரி நான் என்ன எழுதுறன் என்று என்  மகளுக்குத் தெரியுமா? என்ன கேள்வி அவளுக்கு தமிழே தெரியாதே?

அம்மாடி ஒரு வழி பண்ணி மகளை அனுப்பியாச்சு. இனியாவது ஒரு நாளைக்கு ஒரு விசிறியா வீட்டிலேயே வீச வேண்டியது தான். எத்தனை நாளைக்குத் தான் கதை எழுதுறன்,கதை எழுதுறன் என்று ஊட்டி, ஏற்காடு போகிறது. கட்டிய வீட்டிலேயே கலகம் பண்ணலாம். இப்பவாவது புரிந்திருக்குமே மகளுக்கு ஏன் இந்தியா வேண்டாமென்று.

August2, 2009

லண்டனுக்கு வாங்கோ……

Filed under: கதை — pukalini @ 21:23

லண்டனுக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாகவே வாழ்க்கை இப்படி நாறடித்து விட்டது. எனக்கென்ன வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் வயசா? இந்த ஆவணியில் 25 ஆகுது. இந்த வயதுக்குள்ளேயே அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் தடுமாறத் தொடங்கி விட்டது.

வீட்டில் மூத்த பெண் பிள்ளை. அதனால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே வளர்த்து விட்டார்கள். பின்னால் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாம்.எனக்கு இப்பொழுது கை காட்ட யாருமில்லை. கொஞ்சம் அழகாக இருந்து தொலைந்து விட்டேனா, ஆக்கினையின் ஆரம்பம். அழகென்றால் அப்பிடி இப்பிடி நயன்தாரா அளவில் இல்லை. சும்மா மா நிறம் தான். நம் மக்களுக்கு நிறத்தில தான் அழகு இருக்கென்று ஒரு நினைப்பு. கேவலம் மைக்கேல் ஜாக்சனே கறுப்பு பிடிக்காமல் அடாவடி பண்ணி இருக்கும் போது, வெள்ளை தான் சொர்க்கத்தின் நிறம் என்று நினைத்திருக்கும் கேடு கெட்ட தமிழ் மகா சனங்களுக்கு என்ன இழவு புரிந்திருக்கப் போகுது.

பள்ளிக்குப் போனாலும் கரைச்சல். கல்லூரிக்குப் போனாலும் இடைஞ்சல். எல்லாம் என் நிறம் பண்ணிய பாடு. ஆடு, மாடுகளுக்கு இந்த நிறம் தெரியவில்லையே? பாழாய்ப் போன மனிதர்களுக்குத் தான் இந்த நிறக்குருடா? அதிலும் வேசிகளின் கூடாரமாகி விட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வேறு என்ன தான் புரியும். பரவை முனியம்மா போட்டுக் குளிக்கும் சவர்க்காரத்துக்கு இந்திக்காரி விளம்பரம். பச்சை மண்ணைக் காட்டக் கூட ஒரு வெள்ளைத் தோல் தேவை. பார்த்துப் பார்த்து வளர்ந்த சனங்களுக்கு மண்டைக்குள் என்ன ஊறி இருக்கும்?

ஆனாலும் எனக்கு எடுப்பும், கொழுப்பும் கொஞ்சம் கூடத்தான். பின்னே, நாய்க் கூட்டம் எதுக்கு அலையுதோ அது என்னிடம் இருக்குதே? போதாதற்கு இளமை வனப்பும், வாலிப மிடுக்கும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா? சில, பல பன்னிக் கூட்டங்கள் முன்னுக்கும், பின்னுக்கும் பகடை உருட்டிக் கொண்டு திரிந்தாலும் நான் என்ன தருமனா ஏமாற? எனக்கு என் பெறுமதி தெரிந்திருந்தது. சும்மா வீணாய்ப் போகலாமா? மிஞ்சிப் போனால் டேய் இந்த பிகருடன் சாப்பிட்டனடா என்று சொல்லும் ஆணழகர்கள் இருந்த வரைக்கும் கல்லூரியில் தண்டச் செலவு வைத்ததில்லை.

ஐந்து வருடங்கள் முதுகலை படித்து முடிக்கும் வரைக்கும் நடந்தேறிய நாட்குறிப்புகளை எடுத்து விட்டால் நாட்டு நடப்பு நாறி விடும். என் பிள்ளை தங்கக் கம்பி, செப்புக் கோல் என்று பீற்றித் திரியும் அம்மாமார்கள் எல்லோரும் வாய்களை பினாயில் போட்டு தேய்க்க வேண்டும். ஆண் சிங்கங்கள் எல்லோரும் காதல் மன்னர்கள் இல்லையோ, மன்மதக் குஞ்சுகள் என்று நினைப்பு.

எனக்கு வெளி நாடு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு. அதுவும் லண்டனுக்கு. அமெரிக்காவில் தான் நம்ம ஊர் பன்னாடைகள் பன்னி மேய்க்குதுகளே? அதுக்கு என்ன வழி? என்னிடம் உள்ளது என்ன? பொறுத்தார் பூமி ஆழ்வார். மாப்பிள்ளை தேடும் போது சொல்லியாச்சு. எனக்கு லண்டன் மாப்பிள்ளை தான். இருந்தாலும் கொஞ்சம் சங்கடப் பட்டுத் தான் போனேன். இரண்டு வருடங்களாயிற்று ஒரு இழிச்ச வாயன் மாட்டுவதற்கு.

லண்டன் மாப்பிள்ளை அல்லவா. லண்டனிலேயே பெரிய கடை இருக்காம். வைத்திருக்கும் கார் மட்டும் ஒரு கோடியாம். பங்களா தான் வீடாம். என்ன அவரு படிச்சது வெறும் பத்தாம். அதுக்கென்ன இவ்வளவு தொழில் பண்ணுறவருக்கு படிப்பு என்னத்துக்கு? ஒரு மாதிரி அடம் பிடித்து அடிச்சு பிடிச்சு கலியாணம் பண்ணி லண்டனுக்கும் வந்தாச்சு.

அப்பாடி இவரு சுத்த மோசம், நான் வந்தது லண்டன் பார்க்க. ஒரு கோடியில கார் இருந்தாலும் வெளியே போனாத் தானே அது கார். இவருக்கு தொழில் முக்கியம். வயசு அப்படி. பத்து வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தது ரொம்பத் தப்போ? லண்டன் மாப்பிள்ளை என்று தொப்பையையும், சொட்டையையும் அசட்டை செய்தது தப்போ? இளம் மனைவி, அதுவும் இருபத்தைந்து வயதில் காய்ந்து கிடக்கின்றது அந்த அரைக் கிழத்துக்கு புரியாதோ?

அப்பவே சொன்னார்கள். காசுக்காரன். 35 வயது. லண்டனில இருக்கிறான். எல்லாம் ஆடி முடிச்சிட்டு ஒரு பிள்ளை பெறும் மிசினை வாங்கிக் கொண்டு போகப் போறானென்று. அது தான் நடக்குதோ? நடக்கப் போகுதோ? ஒரு சினிமா, கடை தெரு என்று எங்காவது போக முடிகின்றதா? ஏன் வெளியே காற்று வாங்கத் தான் போய் வர இயலுதா? மரக் கட்டை. ஜடம். இதுகள் எல்லாம் எதுக்கு கலியாணம் கண்ணறாவிகளைப் பண்ணித் தொலைக்குதுங்கள்?

இங்க வெள்ளைத் தோலுக்கு மதிப்பும் இல்லை. ஏதோ பிச்சைக்காரி மாதிரி பார்வை. புருசனும் வீண். எனக்காக உயிரையும் தருவேன். சொர்க்கத்தையும் உள்ளங் கையில் ஏந்துவேன். மகாராணிக்கு இதயத்தினை கிழித்து அபிசேகம் செய்வேன் என்று புலம்பித் திரிந்தவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக கனவில் வருகிறார்கள்.

July18, 2009

நான்-ஒரு கொலையின் சாட்சி.

Filed under: கதை — pukalini @ 18:27

தீபாவளிக் கூட்டம். எங்கும் கச கச என்று ஒரே மக்கள் திரள். அங்கு, இங்கு அசையவே முடியவில்லை.இன்னும் அரை மணி நேரம் தாமதமாகத் தான் நாகர்கோவில் போகும் பயணிகள் புகைவண்டி வந்து சேரும். அதற்கிடையில் இங்கு இருந்தால் மூச்சுத் திணறிச் செத்து விடுவார்கள். இந்த சமுத்திரத்துக்குள் முத்துக் குளிப்பது போலத் தான் உள்ளே ஏறுவதும், ஆக மிஞ்சிப் போனால் ஒற்றைக் காலில் நிற்பதும்.

நினைத்த மாதிரியே மேலும் அரை மணி நேரம் தாமதமாக வண்டி ஆடி அசைந்து வந்தது. வரும் போதே தெரிந்தது மக்கள் தொங்கிக் கொண்டு வருவது. ஏற்கனவே தாமதம். பணம் கட்டி சீட்டுக்களையும் வாங்கியாகி விட்டது. இந்த நெரிசலுக்குள் அடம்பிடித்து ஏறி எங்களது பிரயாணத்தை உறுதிப் படுத்தாவிட்டால் அப்புறம் என்ன வாலிப முறுக்கு. நானோ எமன் மாதிரி கையில் பையுடன் நிற்கிறேன். என்னுடன் கூட வந்த நண்பனோ எமகாதன் மாதிரி என்னிலும் இருமடங்கு அளவில் வண்டியையே இழுத்து நிறுத்துவது போல் நிற்கிறான்.

ஒரு மாதிரி அடம்பிடித்து உள்ளே கால் வைத்து ஏறியாகி விட்டது. கையில் உள்ள பையையே கீழே வைக்க இடமில்லை. நிற்பதற்குக் கூட இடமில்லை.  வாசனை அடித்து நொருக்கும் கழிப்பறைக்கு முன் ஒற்றைக் காலில் நிற்பதற்குத் தான் இடம் கிடைத்தது. பலத்த சத்தம். அனேகமானோர் திருப்பூரில் இருந்து ஊருக்குப் போபவர்கள். கழிப்பறை செல்லும் வழி முழுவதையும் அடைத்து நானும் எனது நண்பனும் நின்றவாறே பயணத்தைத் தொடங்கினோம்.

உள்ளே கண்ணுக்கு எட்டும் தொலைவில் இரண்டு இளம் பெண்கள், பொருட்கள் வைக்கும் பலகையில் பொருட்களுக்கு மேல் நன்றாக காலை விரித்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள். கீழே கவனிக்கத் தக்கவாறு ஒரு பழங்கிழம். நெற்றி முழுவதும் திருநீற்றுப் பட்டை. அவருக்கு முன்னால் வாளிப்பான ஒரு பெண். சிறுமிக்கு அதிகம். பெண்ணுக்கு குறைவு.
எங்களது பக்கம் ஒரு வாயில் படியில் இரு சிறுவர்கள். ஒருத்தனுக்கு வயது 15 இருக்கும். அடுத்தவனுக்கு 13 வரும். அண்ணன் தம்பியாம். இன்னும் பலர். முக்கியமாக ஒருத்தன். வயது நாற்பதுக்கு பக்கம் இருக்கும். நெடு நெடு என்று வளர்ந்திருந்தான். தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இடம் பக்கம் வகிர்ந்து சீவி விட்டிருந்தான். வாயிலிருந்து பீடி நாத்தம் கப கப என்று வந்து கொண்டிருந்தது.

வண்டி அசைய ஆரம்பித்தது. என் நண்பன் முன்னால் காலை விரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வலை வீசிக் கொண்டிருந்தான். போட்டியாக அந்த முக்கியமானவன். எனக்கு வாய்த்தது கழிப்பறை வாசம் தான். எப்படியும் நண்பன் அந்த இரண்டுக்கும் அருகில்  போய் விடுவான். நான் நிற்பதற்காவது கொஞ்ச இடம் கிடைக்கும்.

பக்கத்திலிருந்த இரண்டு சிறுவர்களும் கலாட்டா பண்ண ஆரம்பித்தார்கள். வண்டியில் நான் இருந்த பெட்டி முழுவது ஒரே கசமுசா. திருப்பூரிலிருந்தே இப்படித் தான் ஆட்டம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் வயதுக்கு அதிகம் தான். பெரியவன் படியில் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தான். வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், வசனங்களும் காது கொடுத்து  கேட்கிற மாதிரி இல்லை. இந்த வயதுக்குள் இப்படியா? திருப்பூரின் வளர்ச்சியோ?எல்லோரும் அவனுக்கு புத்திமதி சொல்ல கிளம்பினார்கள்.ம்ம்ம். ஒரு அசுமாத்தத்தினையும் காணோம்.

கையில் பீடியை எடுத்து பற்றினான். எல்லோர் மூஞ்சியிலும் புகை விட்டான். தம்பிக்காரன் அது மட்டும் பண்ணவில்லை.எல்லோர் திட்டும் சேர்ந்து கொண்டது. போதாதற்கு படிக் கம்பியினைப் பிடித்துத் தொங்கி பெட்டிக்குள் இருந்த இளம் பெண்ணின் மீதும் எட்டி, எட்டி புகை அடித்தான். கிழம் கிளம்பியது. நெற்றியைச் சுருக்கி திருநீறு முகத்தின் மீது விழ திட்டியது. அந்தச் சின்னப் பெண் அவரின் மகளோ, பேத்தியோ? பொடியா உள்ள வா. என்ன தான் அநியாயம் செய்தாலும் பரவாயில்லை. கம்பியில் தொங்காத. என் வயதுக்காவது மரியாதை தா. நான் எத்தனையோ விபத்துக்களை பார்த்திருக்கேன். கம்பியைப் பிடித்து ஆடாத. கவனம்.

தேறவில்லை. ஆகவும் அட்டகாசம் தாங்கவில்லை. நண்பனும் நல்லவனுக்கு நடித்து பொருட்கள் வைக்கும் பலகையில் இடம் பிடித்துக் கொண்டான். முன்னுக்கு நின்ற முக்கியமானவனும் அந்த இருவருக்கும் பாடம் புகட்டப் போறதாகச் சொல்லிக் கொண்டு வாயில்ப் படிக்குள் போய் விட்டான். நானும் மெதுவாக நகர்ந்து பெட்டிக்குள் புகுந்து கொண்டேன்.கொடுமுடி கடந்த பின் திடீரென்று ஒரு நிசப்தம். வண்டிச் சத்தம் மட்டும் கேட்டது. மெது மெதுவாக தகவல் கசிந்தது.அந்த அட்டகாசப் பெரியவன் ஓடுகின்ற வண்டியில் இருந்தே கீழே விழுந்திட்டானாம். ஒருத்தரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர். யார்மே கவலைப் படவில்லை.கிழம் மட்டும் இப்படித்தான் அங்கேயும் நடந்தது என்று பழங்கதை கூறிக் கொண்டு வந்தது.

எனக்கு என்ன் நடந்ததென்று புரிந்து விட்டது. நடந்தது மிகவும் நல்லது. அவன் இப்பவே இப்படி என்றால் பின்னாளில்? நான் ஒன்று செய்ய நினைத்தேன். அது யார் மூலமாகவோ நடந்து விட்டது. ஆக மொத்தம் காரியம் நல்லது. நடத்தியவன் நல்லவனா? கெட்டவனா? அது நமக்கு முக்கியம் இல்லையே? வண்டி ஓடும் வேகத்துக்கு தப்புவது கடினம். அதுவும் சில்லுக்குள் அகப்பட்டால் சவப் பெட்டிச் செலவும் மிச்சம்.

வண்டி மதுரைக்குள் ஆடி அசைந்து நுழைந்தது. ஒரு கொலையின் தடங்களை மறைத்துக் கொண்டு கீச்சிட்டுக் கொண்டு நின்றது. மக்களும் அடித்துப் பிடித்து உள்ளே ஏறினார்கள். நானும் நண்பனும் இறங்கி நடந்தோம். அந்த முக்கியமானவனும் முன்னுக்குப் போய்க் கொண்டிருந்தான். டேய், அவன் தானா விழவில்லையடா. இவன் தான் தள்ளி விட்டிட்டான். நண்பனுக்கு வியர்த்தது. எப்படித் தெரியும்? எனக்கு நிச்சயமாத் தெரியும். இப்ப இன்ன செய்யலாம். விட்டுத் தொலை. நமக்கேன் வீண் வம்பு. சனியன் தொலைந்தது.

கவனமாக அவனுக்குப் பின்னாலேயே போனோம். முன்னுக்குப் போன பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள். நெருங்கிப் பார்த்ததில் அவன் அவளை உரசுவது அப்பட்டமாகத் தெரிந்தது. நண்பன் என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை நெருங்கினேன்.

July11, 2009

என்னைக் காதலித்தவனுக்கு ஒரு மடல்,

Filed under: கதை — pukalini @ 19:35

என்றும் என்  இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அருமை நண்பா,

இன்று உனக்கு மண நாள். பலதும் பெற்று நல்வாழ்வு  வாழ எனது வாழ்த்துகள். இருந்த போதிலும் உனது திருமண விழாவிற்கு வர இயலவில்லை. அழையா விருந்தாளியாக வருவதற்கும் எனது மனம் இடங் கொடுக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக நமது  நட்பு  நன்றாகத் தானே இருந்தது. ஆண்-பெண் நட்பு எப்படியும் ஒரு ஒரு நாளைக்கு கேள்விக் குறியாகும் என்று எல்லோரும் சொல்லும் போது நான் மட்டும் அதை நம்பவில்லை. நமது நட்பு ஆழமானது. எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று நினைத்திருந்தேன்.

உன்னை எப்பொழுதுமே நண்பன் என்ற தரத்திற்கு மேல் என்னால் உயர்த்த முடியவில்லை. நீ முஸ்லிமாக இருந்த போதும் எனக்காக கோயிலுக்கு வந்த போது பெருமைப் பட்டேன். பரீட்சை சமயங்களில்  எனது எழுத்து வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் போது சந்தோசமடைந்தேன்.

எப்பொழுதுமே உன்னை உயர்ந்தவனாகவே காட்டிக்  கொண்டாய். நானும் ஏமாந்தேன். என்னில் அக்கறை உள்ளவனாக இருந்தாய். நானும் நம்பினேன். அந்த அக்கறை ஏன் என்று புரிந்த போது அருவருப்பாக இருந்தது.

உன்னை ஒருத்தி காதலிக்கும் போது வேண்டாம் என்று ஒதுக்கினாய். எனக்காக என்றாய். ஏனென்றால் நமது நட்பை சந்தேகிப்பதாகச் சொன்னாய். எனக்கு பெருமை பிடிபடவில்லை. இப்படி ஒரு நண்பனா என்று.

எப்பொழுதும் நீ ஒரே கண்ணோட்டத்தில் தான் என்னிடம் பழகி வந்திருக்கிறாய். அந்தச் சனியனையாவது முதலில் சொல்லித் தொலைத்திருக்கலாம் தானே? எதற்கு மூடி மறைத்தாய்? பயமா? நம்பிக்கை இன்மையா?

நான் இன்னுமொருவனைக் காதலிப்பதாகச் சொன்னதும் ஏன் துள்ளிக் குதித்தாய்?  உனக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்று அடம் பிடித்தாய். எனது உணர்வுகள் உனக்கு புடலங்காயாய்ப் போய்விட்டனவா? அன்றிலிருந்து உனது கணக்கு தீர்க்கப்பட்டு விட்டது தானே?

அதற்குப் பிறகும் நீ சும்மாவா இருந்தாய் எனது காதலைப் பற்றி இல்லாத பொல்லாப்புகளை சொல்லிக் கொண்டு திரிந்தாய். ஆண்டவனுக்கு நன்றி. உன்னை அடையாளம் காட்டியதற்கு.

இப்பொழுது உனக்கு கலியாணமாம். பெண் உன்னைக் காதலித்தவளாம். மதம் மாற ஒப்புக் கொண்டபடியால் நீயும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாயாம். உனக்கு இது ஒரு செட்டில்மென்ற். அவளுக்கு கருமாதி.

உனக்காக நான் எப்போதும் கலங்குவதுண்டு. எப்பொழுது நீயும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டாயோ அப்பொழுதே நீயும் செத்து விட்டாய்.  உன்னை உத்தமனாக எண்ணியதற்கு என்னைத் தான் நொந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நினைத்தாலும் உன்னுடன் பகிர்ந்து கொண்ட தருணங்கள்  விரக்தியடைய வைக்கின்றன. எனக்கு மாதவிடாய் வெளியே போக முடியவில்லை என்பதைக் கூட உன்னுடன் சொல்லிக் கொண்டேனே? நீ எப்படி அசிங்கமாய் நினைத்தாயோ? சுடிதார்  சால்வை காற்றில் பறப்பது கூட எனக்கு அக்கறையைக் கூட்டவில்லை உன்னுடன் இருக்கும் போது. ஆனால் நீ கண்டிப்பாய் எப்படி உணர்ந்திருப்பாய் என்று இப்பொழுது நான்  நொந்து கொள்கின்றேன்.

உன்னை நினைத்துக் கவலைப் படாமல் இருக்கச் செய்ததற்கு எனது நன்றிகள்.

வாழ்க வளமுடன்,

…………

July9, 2009

தம்பியான வில்லன்.

Filed under: வகுப்பு — pukalini @ 20:19

ஒரு மாதமாக வகுப்புக்கு போறதும் வாறதுமாகவே இருக்கு. உருப்படியாக நடந்தது எதுவும் இல்லை. வகுப்பில் என்னிலும் வயது குறைந்த குழந்தைகள். கல்லூரிப் படிப்பு சப்பென்று போய் விடுமோ என்று மனசுக்குள் ஒரே அங்கலாய்ப்பு. பார்க்கத் தகுந்தவாறு ஒரு பெண் கூட இல்லை. அதாவது எனக்கு தோதாதன மாதிரி. மாணவப் பெண்கள் எல்லோருமே இன்னமும் பக்குவப் படவில்லை.  காலையில் வகுப்புக்கு வந்தமா, காலைத் தூக்கி கதிரைக்கு மேலே போட்டமா, தயிர் சாதத்தை  புளிச்சுப் போன  மாங்காய் ஊறுகாயுடன் நக்கித் தின்றமா,வகுப்பில் நல்லாத் தூங்கினமா என்றே பொழுதைப் போக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.

பசங்க இன்னமும் படு மோசம். ஒழுங்காக் குளிக்கக் கூட அக்கறை இல்லை. வகுப்புக்கு வந்தாலும் ஏதாவது சினிமா நடிகையின் படத்தை ஒளித்து ஒளித்துப் பார்ப்பதற்கே காலங் கடந்து விடும்.  சின்னப் பொடிசுகள்.இதற்கிடையில் அண்ணா, அண்ணா என்று அன்புத் தொல்லை. எப்படி சகசமாய்ப் பழகுவது.என்ன செய்வது இந்த வயதில் படிக்க வந்தது யார் குற்றம்?

இன்றைக்கு வகுப்பு நடத்த புதுசா ஒருத்தி வாறதென்ற பேச்சு. வாறதாவது கொஞ்சம் குளிர்ச்சியாய் இருக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு ஒன்றுக்கு இரு தடவையாக சவர்க்காரத்தை போட்டுத் தேய்த்து கிளம்பினேன். ஆண்டவா, அப்படி ஒருத்தன்  இருந்தானென்றால் உனக்கு ரொம்ப நன்றிப்பா. வந்தவளாவது அம்சமா இருக்காளே? இனிமேல் கண்டிப்பா பாடம் நடத்துறதைக் உன்னிப்பாகக் கவனிப்பேன்.

ஒரு மாதம் கடுகாய் கரைந்து போக, கனவுலோகக் காதலும்  அத்திவாரம் போட்டு  மெல்ல, மெல்ல மேலெழும்பிக் கொண்டிருந்தது. பசங்க, பொண்ணுங்களும் பரவாயில்லை. நானும் வயது வித்தியாசம் பாராது பழகியதால் அவர்களும் கொஞ்சம், கொஞ்சமாக பயத்தை விட்டு பழக ஆரம்பித்தார்கள்.

இன்று மாலை கடைசி வகுப்பு. நம்மாளின் மாதிரிப் பரீட்சையாம். எல்லோருமே ஒரு மாதிரியாய்  ஆளையாள் பார்த்துப் பார்த்து எழுத நமக்கு கோபம் பொத்துக் கொண்டு வெளியேறி கரை தட்டியது. டேய் எல்லோருமே ஒழுங்காப் படிச்சு எழுதுங்கடா. அப்புறம் நீங்க கோட்டை விட்டு நம்மாளு மனசு சங்கடப் படுவதை என்னால் பொறுக்க முடியாது கண்ணுங்களா, என்று ஒரு சத்தம் போட்டு வைத்தேன்.

இதற்காகவே காத்திருந்தவன் போல் வில்லன் கிளம்பினான். நானும் வழமை போல் சீக்கிரமே முடித்து விட்டு அவசரமாய் கிளம்பினேன். நமக்குத் தான் எப்பொழுதுமே சினிமாவும், தண்ணிப் பார்ட்டியும் வெளியே காத்திருக்கே?

அடுத்த நாள் காலையில் விடயம் ஊதிப் பெருக, வகுப்பில் எல்லோருமே என்னிடம் வந்து  நடந்தது என்ன என்று தெளியப் படுத்தி கவலைப் படுத்தினார்கள். முதல் வகுப்பு நம்மாளு உள்ளே வந்தா, வந்து என்னிடம் நேராக இனிமேல் இப்படி பண்ண வேண்டாம். நல்லது இல்லை, என்று புத்திமதி வேறு. அம்மாடி உனக்கு என்னிலும் இரண்டு வயது கம்மிம்மா, எனக்கே நீ அறிவுரை சொல்லுறியே என் உணர்ச்சிகளை  நீயாவது கொஞ்சம் புரிந்து கொள்ளனம்மா என்று மனசுக்குள் கேட்டுக் கொள்ள, அவவுக்கு அது கேட்டிருக்கும் போல முகத்தில் ஒரு வித  நாணம் படர நகர்ந்து விட்டாள்.

அதுக்கப்புறம் என்ன ஒரே கலாட்டா தான்.

வில்லன் – ஒரு நாள் அவனைத் தனியே கூட்டிப் போய் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்து எனது நன்றியை வெளிப்படுத்தினேன். ஒன்று வகுப்பில் என்னுடன் கூட இருந்தவர்களை அடையாளம் காட்டியதற்கு, இரண்டாவது எனது காதலுக்கு  தூது போனதற்கு.

July4, 2009

பெண்ணே உன் நாணமெங்கே?

Filed under: கதை — pukalini @ 17:16

கடைக்குப் போய் நெடு நாட்களாகி விட்டது.இன்று திடீர் சமையலுக்கு ஏற்பாடாகி இருந்தது. ஏதாவது வாங்கினால் தேவலை என்று அங்காடிக்குப் போனேன். எப்பொழுதும் தனிமையாய்ப் போவதில் அனுகூலம் இருக்கத் தான் செய்யும்.

கையில் கூடையுடன் எதையோ தேடிக் கொண்டிருந்த எனக்கு கண்ணில் மின்னல் தட்டியது. நான் நடந்து கொண்டிருந்த பாதையில் ஒரு பெண் சாவகாசமாக இருந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தாள். கிட்டவாகப் போனேன். அழகென்றால் அது தான் அழகு. அப்படியே மனதைப் பறிகொடுத்து பரவசமாகி நின்றேன்.

அவளோ தன்னை ஒரு ஆண் மகன் உற்றுப் பார்க்கிறான் என்ற கவலையோ, பயமோ கொஞ்சம் கூட இல்லாமல்  தன் வேலையில் கவனமாக இருந்தாள். முழங்காலில் இருந்து,ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டு, முன்பக்கமாக பெட்டியின் மீது சாய்ந்து எதனையோ மும்முரமாகச் சாப்பிட்டிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே போட்டிருந்த குட்டைச் சட்டை பின் பக்கத்தல் மேலெழும்பி ஒரு மாதிரி இருந்தது. எனக்கு அதைப் பார்க்கக் கூட கூச்சமாயிருந்தது.

எப்படி ஒரு பெண்ணின் அழகை அவளுக்கே தெரியாமல் ரசிப்பது. அவளோ ஒரு எருமை மாடு தன்னை வெறிப்பது தெரியாமல் தன் வேலை தானுண்டு என்று இருக்கிறாள். என்னாலும் அவ்விடத்தினை விட்டகல முடியவில்லை. அவளை அப்படியே வாரி அணைக்க வேண்டும் என்று மனசு அங்கலாய்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று வில்லி அவளின் அம்மா உருவில் வந்தாள். மாமா போக வேண்டும் வழியை விடு என்று சொன்னது தான் தாமதம். ( நான் கேட்டனா?)மான் குட்டி போல துள்ளி எழும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் கபடமற்ற சிரிப்பில் அப்படியே இதயம் வெளியே துடித்து விழுந்தது. பாழாய்ப் போன உலகம் இரண்டு வயதுக் குழந்தையைத் தொட்டாக் கூட தப்பாக நினைக்கும். திட்டியவாறு வெளியேறினேன்.

சாயாத கொம்பிருந்தும்  தலை நிமிர்ந்து பாயாத மான். இப்படி ஒரு வசனம் அடிக்கடி தட்டுப் படும். எல்லாமிருந்தும் ஒரு  குழந்தை பெற்றுக் கொள்ள வழியில்லையே?

June26, 2009

உனக்கெல்லாம்….

Filed under: அலட்டல் — pukalini @ 21:03

ஏற்கனவே நேரமாச்சுது. இப்படித் தான் இவங்கள் எப்பொழுதும். மூட்டை கட்டிட்டு கிளம்புற நேரத்தில தான் எதையாவது சொல்லிக் கடுப்பேத்துவாங்கள். இன்னிக்கு வெள்ளிக் கிழமை. நேரத்தோட போனாத் தான் எங்கேயாவது ஒரு கோயில்ல சாப்பாடு கிடைக்கும். நாசமாப் போவானுகள். வெளிக்கிடுற நேரமாப் பாத்து கத்தியை வச்சிட்டாங்கள்.

எப்படியோ முட்டி, மோதி அலுவலை முடித்து வெளிக்கிட்டாச்சு. ஆக மொத்தம் 10 நிமிசம் தான் பிந்திப் போயிருக்கு. அடப் பாவமே எதுக்குடா இப்பிடித் தலையால தெறிக்கிற? ஆறுதலாத் தான் பண்ணி முடிக்கலாமே? அடிச்சுப் பிடிச்சு பேருந்துக்க இடம் பிடிக்க ஓடி மேல் மாடியில் இருந்தாச்சு. இது போய்ச் சேர எவ்வளவு நேரமாகுமோ? கட்டையில போவானுகள், சந்திக்குக் சந்தி வெளிச்சம் போட்டு நிப்பாட்டிருவாங்கள். கருமாந்திரம் பிடிச்சவனுகள்.

இரண்டாவது நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்பியது. 6 வயதில ஒரு பொண்ணு எட்டி, எட்டி மேலே வந்தது. பின்னால் ஒரு 3 வயதில் ஒரு பெண் குழந்தை ஊர்ந்து, ஊர்ந்து ஏறியது. அதுக்கும் பின்னாடி ஒரு அம்மாவும் ஒரு கிழவனும் ஏறி இருந்திட்டாங்கள்.  மூன்று பெண்களுமே மூடி முக்காடு போட்டிருந்தார்கள். அம்மாவுக்கு ஒரு 25 வயசு போடலாம். கிழம் ஒரு காலை பெட்டியில் வச்சிட்டு தான் கிளம்பியிருக்கும் போல.

பக்கத்தில தான் கிழம் உக்காந்திருந்திச்சுது. கையில 4 சீட்டுகள். அடப்பாவமே இது தான் அந்த மூண்டுக்கும் சீட்டு எடுத்திருக்கா? அந்த அம்மாவுக்கு இது தான் புருசனா?அதுவாவது பரவாயில்லை.  அந்தப் பச்சை மண்ணுக்கும் அப்பனா?


கோதாரிப் பிடிப்பானே? உனக்கு எங்கேயடா அறிவு போச்சுது? இந்த வயதிலும் உனக்கு பொண்டாட்டி கேக்குதா? அது தான் போதாதென்று குழந்தை வேறா? நீ எப்ப மண்டையப் போடப் போறியோ? அதுக்கப்புறம்?  பொண்டாட்டியாவது எங்காவது தொடுப்பு வைச்சு சமாளிச்சிருவா? புள்ளைங்க? பாவம் அறியாத வயசிலேயா எல்லாத்தையும் துலைச்சிட்டு நிக்கணுமா? ஆசைப் பட்டா ஏதாவது செய்து துலைக்க வேண்டியது தானே எதுக்கடா பன்னி மாதிரி பெத்துத் தள்ளியிருக்க?

மனசுக்க வெக்கை அடிச்சுக் கொண்டிருந்தது. இவ்வளவு கேள்விகளும் மண்டைக்க ஓடிக் கொண்டு தான் இருந்தது, கேக்கேல்ல.    திடிரென்று சின்னன் தூங்கி வழிஞ்சது. கிழம் மடியில தூக்கி படுக்க வைக்க பெரிசு,தாயிடம் அம்மா தாத்தா மடியில தங்கச்சி தூங்குது எண்டு போட்டுக் குடுத்தது.

அட சனியனே, தாத்தாவைப் போய் அப்பன் எண்டு நினைச்சியே? உனக்கெதுக்கெடா இந்த தேவையில்லா ஆராய்ச்சி. பெரிய புடுங்கி மாதிரி  நினைப்பு வேற. உன்னை எவனாவது கேட்டானா? ஏறினமா முடிஞ்சா ரெண்டு துண்டை பார்த்தமா இறங்கினமா எண்டில்லாமா ஞாயம் கதைக்க வந்திட்டான்.  போடா………

Next Page »

Blog at WordPress.com.