புகழினி

December4, 2009

மண்ணாங்கட்டி.

Filed under: சமுகம் — pukalini @ 03:53

இந்த மண்ணாங்கட்டிக்கு எப்போதுமே ஒரு மிதப்பான நினைப்பு. தான் தான் இந்த உலகத்திலேயே ஒரு உத்தம புத்திரன். எங்கேயோ ஒரு கடவுளுக்கு பக்கத்தில் இருந்து சாமரம் வீச வேண்டியவன். தவறுதலாக பூமியில் பிறந்து விட்டான். இப்பூவுல வாசிகளுக்கு தான் ஒரு அபூர்வமானவன் என்ற சிந்தனை. ஏதோ ஆறடி உயரத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு டொங்கு டொங்கென்று கைகளை விசிறிய படி நடந்தால் பெரிய இவன் என்று எண்ணம்.

இப்படித்தான் இந்த மண்ணாங்கட்டி பேருந்து நிலையத்தினூடாக நடந்து போய்க்கொண்டிருந்தான். முன்னால் ஒரு சிறுமி அழுது கொண்டு வந்தாள். அவளுக்கு வயது மூன்று இருக்கும். பாடசாலையில் இருந்து வந்து இருக்க வேண்டும். முதுகில் ஒரு புத்தகக்கூடை பின்னாலே இழுத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு தாத்தாக் குடை வேறு. எப்படியோ கூட வந்தவரைத் தவற விட்டிருக்க வேண்டும்.

இப்படித்தான் முன்னரும் ஒருமுறை இந்த மண்னாங்கட்டி அனுபவப்பட்டிருந்தான். அது  சென்னையில். கோயம்பேடு  பேருந்து நிலையம். ஒரு சின்னப் பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டு நின்றிருந்தது. பக்கத்தில் எவருமே இல்லை. சுற்ற முற்றப் பார்த்து விட்டு போலிசிடம் கூட்டிக் கொண்டு போனான். இடையிலேயே அவளின் அப்பா வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

ஏதோ பெரிய சாதனை செய்த மன நிறைவு மண்ணாங்கட்டிக்கு. அந்தப் பெண்  குழந்தை அப்படியே நின்றிருக்குமாம். யாராவது இனிப்பைக் காட்டி கடத்திப் போயிருப்பார்களாம். அப்புறம் என்ன நடந்திருக்குமோ? தன்னால் அந்த ஒரு கொடிய வரலாறு தவிர்க்கப் பட்டு விட்டதாக மன நிறைவு.

அதே போலவே இந்தப் பெண் குழந்தையையும் உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு செயற்கரிய காரியத்தை சாதித்த மாதிரி இருக்கும். மண்ணாங்கட்டி இவ்வளவையும் சிந்தித்துப் பார்த்து அந்தப் பாப்பாவைத் தேடத் திரும்பினான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தான் ஏற்கனவே பெரும் எண்ணத்தில்  நடந்து நிறையத் தூரம் கடந்து வந்து விட்டது.

மண்டைக்குள் என்ன இருக்கோ என்று மண்ணாங்கட்டி தான் என்று தலையில் தட்டி விட்டு, விடுவிடு என்று திரும்பவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு  நடந்தான்.

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Create a free website or blog at WordPress.com.