பாண் போறணை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆறடி ஆரையில இருக்கிற போயிலைப் போறணை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது. பாதித் தீவாருக்கு அது தான் வாழ்வு. நல்ல தண்ணி இல்லா ஊரில, மழைத்தண்ணியை நம்பிச் செய்யக் கூடிய-காசு கொட்டித் தரும் ஒரே பிழைப்பு போயிலை. அதுவும் வருசத்தில தொண்ணூறு நாள் வெயில் வெக்கைக்குள்ளேயும், கொஞ்ச நாள் போறணைச் சூட்டுக்கேயும் காய்ஞ்சா கை மேல் பலன். மிச்ச நாள்களை கஞ்சியும் பினாட்டுமாகக் கழிக்க வசதியா இருக்கும்.
ஊரில எல்லா வீட்டிலேயும் ஒரு போறணை கண்டிப்பாக இருக்கும். பெருசா, சின்னனா, மத்திமமா எண்டு கன சைசுகள்.விசேசமா கிணத்தடியில தான் போறணை கட்டியிருப்பார்கள். குசினியும் அதே மாதிரித் தான். பத்தி எரிஞ்சா அணைக்க வசதியா இருக்கும். போறணை வீட்டுக்கு ஒண்டு இருந்தாலும் எல்லோருக்கும் புகை போட வராது. அனுபவத்தில படிஞ்சு வரணும். அப்பு புகை போடுறதிலேயும் கில்லாடி. ஊரில டைம் டேபிள் போட்டுக் கூப்பிடுவாங்கள்.
சோதனை எழுதி முடிச்சாப் பிறகு சும்மா இருக்க வேண்டாம் எண்டு நானும் கொஞ்ச நாள் தோட்ட வேலைக்கு போனேன். அப்பு அதில கொஞ்சத்த எனக்கு பிரிச்சுத் தந்திட்டார். செலவெல்லாம் அவரோட. ஆனா வித்து வாற காசு முழுக்க எனக்கு. செமத்தியான அக்ரிமெண்ட். காலங் காத்தாலேயே எழும்பித் தோட்டத்துக்கு போயிருவம். மத்த சோம்பேறிக் கூட்டங்கள் வெயில் குளிக்க வரேக்க நாங்கள் சாப்பிட்டிட்டு படுத்திருப்பம்.
சண்டையால கன காலமா கைப்படாம இருந்த பூமி. சும்மா வீசி எறிஞ்சு விளைஞ்சு குடுத்துது. என்னளவு உயரத்தில என்னளவு நீளத்தில ஒவ்வொரு இலையும் கருவண்டு போல கறுத்து முறுகிக் கிடந்தது. வளமையாக ஒம்பது இலையில தலைப்பு உடைக்கிற அப்பு பதினொரு இலை வரைக்கும் விட்டார். ஒவ்வொரு நாளும் காலையில தோட்டத்துக்க போனா அப்பு கவலைப் படுவார். எதுக்கடா இப்படி பொலிஞ்சு கிடக்குது. பெரு மூச்சோட தான் வேலை தொடங்குவார். எனக்கு ஏனென்று புரியவேயில்லை.
வெட்டிற சீசனும் வந்தாச்சுது. அப்பு வழமையாக் கூப்பிடிற சொத்தியன்ர வண்டில விட்டிட்டு லாண்ட் மாஸ்ரருக்கு சொல்லிட்டார். அதுவும் முதல் ஏத்தம் எங்கட. முன்னூறு கண்டு வெட்டிற இடத்தில நூத்தம்பது கண்டு தான் வெட்டினார். பரவிப் போட இடம் காணெல்ல. உச்சி வெயிலுக்கேயும் பரவி விட்டுக் காய மாட்டன் எண்டிட்டுது. பெட்டிக்கேயும் கொள்ளாம வெளியில தள்ளிக் கொண்டு நிண்டுது. அப்ப தான் விளங்கிச்சுது. உன்ர தான் பெரிசு, உன்ர தான் பெரிசு எண்டு ஊரில ஏன் சொன்னாங்கள் எண்டு. மொத்தமா இருவது தரம் பிரிச்சுப் பிரிச்சு வெட்டினம்.
அப்பம்மா வீட்டில தான் புகை போட்டம்.முதல் புகை போட்டு இரண்டாம் புகையும் முடிஞ்சு காச்சல் புகை போடத் தொடங்கினம். ஒவ்வொரு வெட்டுப் போயிலையையும் அப்பு பாதியாப் பிரிச்சுத் தான் புகை போட்டார். பாதிப் போறணை சும்மா கிடந்து சூடு காஞ்சுது. ஒவ்வொரு முடிச்சா அப்பு இழுத்து இழுத்துப் பார்த்து தூக்கினார். அம்மம்மா ஓட்டை போட்டுக் குடுத்த ஒவ்வொரு ஊமல்க் கொட்டையையும் தட்டிப் பார்த்து தான் பரவிப் போட்டார். ஏறத்தாள முடிஞ்சு போயிற்றுது.
இன்னமும் கொஞ்சம் தான் இருந்தது. அப்பு இந்த முறை கொஞ்சம் கனக்கவே தூக்கிட்டு புகை போட்டார். காலை ஏழு மணிக்கே புகை போட்டாச்சு. அப்பு அடுத்த புகை போட எங்கேயோ போயிட்டார். நான் வீட்ட வந்து குளிச்சுக் கொண்டிருந்தன். அன்ரி கத்திக் கொண்டு ஓடி வந்தா. டேய் போறணை எரியுதடா எண்டு. நானும் கடப்பு, பொட்டு எல்லாம் பாஞ்சு கடந்து ஓடி வந்துப பாத்தா புகை தான் வந்தது. போறணை வாசலில தொங்கிக் கொண்டிருந்த சாக்கைத் தூக்கிப் பார்த்தா உள்ளுக்க நெருப்பு பத்தி எரிஞ்சு கொண்டிருந்தது. மாறி, மாறி கிணத்தில தண்ணி அள்ளி ஊத்தினம். ஊரே கூடிச்சுது. கண்ணூறு பட்டிட்டாம். அது தான் பத்திட்டுதான்.
அப்பு ஆறுதலா பத்து மணிக்கு வந்து சேர்ந்தார். நடந்த விசயம் அவருக்கு இன்னமும் தெரியேல்ல. அப்பு எல்லாம் எரிஞ்சிட்டுது எண்டன். ஒண்டும் சொல்லேல்ல. எந்த உணர்ச்சியையும் என்னால் படிக்க முடியல. வாயை மட்டும் கொஞ்சம் திறந்திருந்தார்.அதிர்ந்து தான் போனார். மெதுவாக வந்து சாக்கைத் தூக்கிப் பார்த்தார். உள்ளே ஒரே சாம்பல் மேடு. அடிக்கடி அப்பு சொல்லுவார். டேய் காச்சல் புகை போடுற போயிலை பெற்றோல் மாதிரி, ஒரு நெருப்புப் பொறி பற்ந்தாக் காணும் முடிஞ்சுது அலுவல் எண்டு. சரிதான்.
அப்பு ஒண்டுக்கும் யோசிக்கல்ல. ஒரு கடகமும் மம்பட்டியுமா போறணைக்க போனார். மளமளவென்று எல்லாத்தையும் அள்ளிக் கொட்டிட்டு வீட்ட வந்து படுத்திட்டார். மத்தியானம் ரெண்டு மணிக்கு ஒழுப்பினார். பெரிய கத்தியும், சின்னக் கத்தியும் தீட்டி ரெடியா இருந்தது. ஒரு கட்டு பனை நாரும் உரிச்சு கிணத்தடியில ஊறிக் கொண்டிருந்தது. வெளியால போய் உள்ள பத்தையளுக்க எல்லாம் பூந்து நீட்டுத் தடியள வெட்டிப் போட்டார். அதுகள களிச்சுப் போடுறது தான் என்ர வேலை. பத்தையளுக்க போக அப்பு என்னை போக விடமாட்டார். தான் சாகிற கட்டை எண்டு எல்லா ஊத்தவாழி வேலையளயும் அவரே செய்வார்.
போறணையில் எரிஞ்ச தடியளை எல்லாம் பிறக்கி வெளியால போட்டிட்டு புதுத் தடியள நாரால சட்டத்தில போட்டு இறுக்கிக் கட்டினார். அம்மம்மா கொஞ்சக் காவோலையளை இழுத்துக் கொண்டு வந்திருந்தா. எல்லாம் கட்டி முடிஞ்சாப் பிறகு காவோலைகளை உள்ள போட்டு கொளுத்தினம். போறணைக்க ஊத்தின தண்ணி காயவாம். அம்மம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கு. எனக்கும் இப்ப தெரியும். கடைசியா மிஞ்சினதுகளையும் தூக்கி புகை போட்டாச்சு.
பின்னேரம் கோயிலடிக்கு வந்தா ஒரே துக்க விசாரிப்புகள். முப்பதாயிரம் எரிஞ்சிருக்குமா? ஒரு நிமிசம் கண்ணை மூடிப் பார்த்தேன். முப்பதாயிரத்தை பத்து ரூவாத் தாளா மாத்தி எரிச்சா மிஞ்சின சாம்மலளவு தான் வந்திருக்கும். பூனையர், அது தான் எங்கட அப்பு பிழை விட மாட்டார் எண்டு வேற பச்சாதாபங்கள். இனி அப்புக்கு மரியாதை கிடையாதா? போயிலைய எரிச்சிட்டாரா? நான் தான் ஏதாவது பிசகு பண்ணி இருக்கணும்.
மறு நாளும் வந்தது. அப்பு ஒரிடமும் போகேல்ல. புகை போடக் கூட்டிக் கொண்டு போக அப்பனும் மகனுமாக ரெண்டு பேர் வீட்டுக்கே வந்திட்டாங்கள். அப்பு மறுத்திட்டார். அவங்களும் விடல. பூனையர் வாங்க. நீங்கள் வராட்டா நாங்க எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக் கொளுத்த வேண்டியது தான் எண்டு அடம் பிடிச்சாங்கள். அங்க போனா காசுங் குடுத்து சீவுற கள்ளில நல்ல கள்ளாக் குடுத்தும் விடுவாங்கள். அப்பு எல்லார் வீட்டுக்கும் புகை போடப் போறேல்ல. ஆனாலும் இவங்களுக்கு புகை போட்டுக் குடுப்பார். ஊரில கள்ளுச் சீவுறவன் வீட்ட போய் திண்டிட்டு வாறான் எண்டு திட்டினாலும் அப்பு சீண்டுறதேயில்லை. நான் கட்டி இருந்த சாறமும் அவங்கள் வாங்கிக் குடுத்தது தான். அம்மம்மாவுஞ் சொன்னா போயிட்டு வாவன் எண்டு. வழமையா அம்மம்மா சொல்லுக்கு அப்புட்ட மரியாதை கிடையாது. ஆனா இண்டைக்கு கிடைச்சுது. ஈச்சாக் கட்டிலில கிடந்த துவாயைத் தூக்கி தலைப்பா கட்டிக் கொண்டு வெளிக்கிட்டார்.
ஆமா, அந்த வருசம் எங்க சொந்தத்தில ஒருத்தரும் சாகேல்ல. அப்புன்ர பெரு மூச்சின் காரணம் கொஞ்சங் கொஞ்சமாத் தான் விளங்கிச்சுது.